தீர்த்தவாரி கண்டருளிய நம்பெருமாள்!

trichy, srirangam temple festival peoples

ஸ்ரீரங்கம் ரங்கநாத கோயிலில் நடைபெற்று வரும் வைகுண்ட ஏகாதசி விழாவின் இராப்பத்து 10- ஆம் திருநாளான இன்று (03/01/2021) நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்.

108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அன்போடு அழைக்கப்படுவது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவானது கடந்த டிசம்பர் மாதம் 14- ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி பகல்பத்து திருவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இராப்பத்து திருநாளின் முதல்நாளான டிசம்பர் 25- ஆம் தேதி நடைபெற்றது.

trichy, srirangam temple festival peoples

இந்நாட்களில் நம்பெருமாள் தினசரி பல்வேறு அலங்காரங்களில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பக்தர்களுக்கு சேவை சாதித்து வந்தார். இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் இராப்பத்து திருநாளில் 10 திருநாளான இன்று (03/01/2021) நம்பெருமாள் தீர்த்தவாரி நடைபெற்றது. இதனையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து தங்கபல்லக்கில் புறப்பட்டு பரமபதவாசல் வழியாக, சந்திரபுஷ்கரணி குளத்தை வந்தடைந்தார்.

அதன் பின்னர், அங்கு தீர்த்தவாரி கண்டருளினார். பெருமாள் தீர்த்தவாரி கண்டருளியதைத் தொடர்ந்து அங்கு கூடி இருந்த ஏராளமான பக்தர்கள் புனித நீரைத் தெளித்துக்கொண்டு பக்தி பரவசமடைந்தனர். வைகுண்ட ஏகாதசி பெருவிழா நாளை (04/01/2021) அதிகாலை நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு பெறுகிறது.

Festivals sri rangam trichy
இதையும் படியுங்கள்
Subscribe