Skip to main content

மக்களின் பயன்பாட்டிற்கு வருமா பாலம்? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

trichy srirangam bridge reopen public expectation 

 

திருச்சி மாநகரையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் கடந்த 1976 ஆம் ஆண்டு காவிரி ஆற்றில் அமைக்கப்பட்ட பாலம் கடந்த நவம்பர் மாதம் 20 ஆம் தேதி வரையிலும் மக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது  இந்தப் பாலம் பழுதடைந்ததால் ரூ. 6.87 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் பாலம் முற்றிலும் மூடப்பட்டு போக்குவரத்தானது சென்னை பைபாஸ் சாலை வழியாகச் செல்லும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்குச் சுற்றிச் செல்லும் நிலை நீடித்து வருகிறது.

 

இந்நிலையில், தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வரும் பாலத்தின் அருகே உள்ள மற்றொரு பழைய பாலத்தில் இருசக்கர வாகனங்களை மட்டும் அனுமதிக்குமாறு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இந்தப் பழைய பாலமானது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டு 1976 வரை பயன்பாட்டில் இருந்து வந்தது. இப்பாலம் அப்பொழுது பழுதடைந்த காரணத்தால் மூடப்பட்டது. இந்நிலையில், தற்போது அந்தப் பாலத்தை மீண்டும் புனரமைத்து இருசக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், பாலத்தைத் திறப்பது குறித்து அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

 

இந்தப் பாலத்தின் ஒருபுறம் திருவெறும்பூருக்குச் செல்லும் குடிநீர்க் குழாயும் மற்றொரு புறம் கழிவுநீர்க் குழாயும் செல்வதால் இதற்கு இடையில் இரண்டு மீட்டர் அகலம் மட்டுமே உள்ளது. எனவே ஒரு வழிப் பாதையாக இருசக்கர வாகனங்களை மட்டும் அனுமதிக்கலாமா என்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.