Skip to main content

"அரசு அலுவலர் தேர்வாணையத் தேர்வுகளை அனைத்து  மொழிகளிலும் நடத்த வேண்டும் "- திருச்சி சிவா வலியுறுத்தல். 

Published on 05/01/2019 | Edited on 05/01/2019
trichy siva



நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடந்த 3-ந்தேதி பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, " அரசு அலுவலர்களுக்கான தேர்வு ஆணையத் தேர்வுகளை மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும் " என்று  வலியுறுத்தினார். அவருடைய கருத்தை பல்வேறு மாநில உறுப்பினர்களும் ஆதரித்துப் பேசினர்.

 

திருச்சி சிவா பேசும் போது, " இந்திய அரசின் கீழ் இயங்கிவரும் அரசு அலுவலர் தேர்வாணையம் ,  அமைச்சரவையிலும் பல்வேறு துறைகளுக்குமான அலுவலர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான பொறுப்பான அமைப்பாக உள்ளது. துறை அலுவலங்களுக் கான அலுவலர்களையும் அது தேர்வு செய்து வருகிறது.
 

 ஒவ்வொரு ஆண்டும் அரசு அலுவலர் ஆணையம் அரசிதழ் பதிவு பெறாத அலுவலர்களைத் தேர்ந்தெடுப்ப தற்காக தேர்வுகளையும், நேர்முகத் தேர்வுகளையும் நடத்தி வருகிறது.
 

இந்த தேர்வாணையம் அலகாபாத், டெல்லி, கல்கத்தா, பெங்களூரு, சென்னை மற்றும் கவுஹாத்தி ஆகிய ஏழு மண்டல அலுவலகங்களையும் இரண்டு துணை மண்டல அலுவலங்களையும் பெற்றுள்ளது. மண்டல (Zonal) அளவில் தேர்வுகளை நடத்தி வந்த தேர்வாணையம், தற்போது இந்தத் தேர்வுகளை தேசிய அளவில் நடத்துகிறது. இந்தத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருவதால், நாட்டின் இதர பகுதிகளைச் சேர்ந்த இந்தி அறியாத மாணவ-மாணவிகள் அரசுப் பணிகளில் சேருவதற்கான வாய்ப்பைப் பெற முடியாத நிலைமை உள்ளது. அதன் மூலம்  வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. 
 

அதனால் பிற மாநிலங்களைச் சேர்ந்த வர்கள் திறமைசாலிகளாகவும் மிகவும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருந்தபோதிலும் இந்தி தெரியாத காரணத்தால் வேலை வாய்ப்பை இழந்து வருகின்றனர்.
 

மத்திய அரசின் தேர் வாணையக் குழுத் (யு.பி.எஸ்.சி.,) தேர்வுகள் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்பட்டு வருகிற போது, அரசு அலுவலர் தேர்வாணையத்தால் எல்லா மாநில மொழிகளிலும் தேர்வுகளை ஏன்  நடத்த முடியாதா? அதே போன்று நேர்முகத் தேர்வுகளையும் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்த முடியாதா? இவை பெருமண்டல  அளவில் நடத்தப்பட வேண்டும். 
 

இது மிகவும் முக்கியமான தீவிரமான பிரச்சினை. எனவே அலுவலர் தேர்வு ஆணையத்தை அழைத்து அனைத்துத் தேர்வுகளையும், அனைத்து மாநில மொழிகளிலும் நடத்த அரசு உத்தரவிட வேண்டும் . ஏற்கனவே இருந்தது போல பெரு மண்டல அளவுகளில் இந்தத் தேர்வுகளை நடத்தவேண்டும் " என்று வலியுறுத்தினார் திருச்சி சிவா. 
 

உடனே தமிழக உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எழுந்து, "  இது முக்கியமான பிரச்சினை. உறுப்பினருடைய கருத்தை நான் ஆதரிக்கிறேன் " என்று குறுக்கீடுகளுக்கிடையே கூறினார்.
 

அதேபோன்று, அவரைத் தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த கே. கே.ராஜேஷ், சத்தீஸ்கரைச் சேர்ந்த  விஜய்சிங் சுதேவ், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவேக் கோ துங்கா, ஒடிசாவைச் சேர்ந்த அனுபவ மொகந்தி ஆகியோரும் திருச்சி சிவாவின் கருத்துக்கு தங்கள் ஆதரவை அவையில் பதிவு செய்தனர்.
 

 அதைத் தொடர்ந்து பேசிய மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு  " அலுவலர் நலத்துறை அமைச்சர் இதனை முக்கியப் பிரச்சினையாகக் கருத்தில் கொள்ள வேண்டுமென  ஒவ்வொரு உறுப் பினரும் விரும்புகின்றனர்.
 

எனவே அலுவலர் நலத்துறை அமைச்சர் இது குறித்து கவனம் செலுத்தி செய்ய இயன்றதைச் செய்ய வேண்டும் " என்று தெரிவித்தார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்