trichy punganur panchayat election second ward councilor incident

திருச்சி அருகே புங்கனூர் முருகன் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அமிர்தராஜ். இவரது மனைவி கோமதி (வயது 33). இவர் கடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் புங்கனூர் ஊராட்சி மன்றத்தின் 2-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அதே பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் (வயது 45) என்பவர் போட்டியிட்டு கோமதியிடம் தோற்றுப் போனார். இதனால் கோமதியின் மீது அவருக்கு தீராத கோபம் இருந்து வந்தது.

Advertisment

இந்த நிலையில் பால்ராஜ், அவரது மகன் மனோஜ் (வயது 25 ) சிவா என்கிற சிவகுமார் (வயது 50) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து அத்துமீறி அந்த பெண் கவுன்சிலரின் வீடு புகுந்து அவரை தாக்கினர். இதை தட்டிக்கேட்ட தவமணி (வயது 40) என்ற பெண்ணையும் அந்த கும்பல் தாக்கி விட்டு தப்பி ஓடினர். இதில் பெண் கவுன்சிலர் கோமதி மற்றும் தவமணி ஆகியோருக்கு கழுத்துப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

Advertisment

இது குறித்து கோமதி, சோமரசம்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் தோல்வியடைந்த வேட்பாளர் பால்ராஜ், அவரது மகன் மனோஜ், சிவா என்கிற சிவகுமார் ஆகிய 3 பேர் மீதும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் சிவாவை கைது செய்தனர். தந்தை மகன் இருவரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் தோற்றுப் போன முன் விரோதத்தில் பெண் கவுன்சிலரின் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.