Skip to main content

மாணவி மரணத்தில் சந்தேகம்... தீவிர விசாரணை நடத்த உறவினர்கள் வலியுறுத்தல்... 

Published on 17/03/2020 | Edited on 17/03/2020

 

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அருகே வடுகர்பேட்டை அரசு உதவி பெறும் கிறித்தவ பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இறந்து போன +1 மாணவி ரேகாவின் மரணத்திற்கு காரணமான பள்ளி விடுதி வார்டனை கைது செய்து சிறையில் அடைக்கக் கோரி சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
 

அரியலூர் மாவட்டம் அயன் சுத்தமல்லி கிராமத்தைச் சேர்ந்த நடராஜன் - புஷ்பவல்லி தம்பதிகளின் மகள் ரேகா. வயது 16. திருச்சி மாவட்டம் புனித ஜோசப் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு சி பிரிவில் படித்து வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி காலை 7.30 மணியளவில் காணவில்லை என்று 8.30 மணிக்கு பெண்ணுடைய சகோதரர் கருப்பையா அவர்களுக்கு அலைபேசி வாயிலாக தகவல் தந்தனர். 

 

 school



 

அதன் பிறகு ரேகாவின் பெற்றோர் விரைந்து பள்ளிக்குச் சென்று நிர்வாகத்தினரிடம் விசாரித்தனர். பின்னர் தங்களது உற்றார் உறவினர்கள் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். மாலை 3 மணி வரை எந்தத் தகவலும் கிடைக்காத காரணத்தால் கல்லக்குடி காவல்துறையில் பணியிலிருந்த இராமலிங்கம் சப் இன்ஸ்பெக்டர் அவர்களிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. புகார் அளித்த பிறகு ரேகாவின் பெற்றோர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பினர். மேலும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 


கல்லக்குடி இரயில்வே நிலையம் அருகில் இரவு 7.08 மணியளவில் மதுரை- விழுப்புரம் பயணிகள் ( ரயில் எண் 56805) ரயிலில் அடிபட்டு இறந்ததாக கல்லக்குடி காவல் நிலையம் மூலமும் மற்றும் இரயில்வே துறை   போலீசாரின் சார்பிலும் பெண்ணின் மாமா ஓய்வுபெற்ற இராணுவ வீரர் செல்வராஜ் அவர்களிடம் அலைபேசி வாயிலாக தகவல் அளிக்கப்பட்டது. 
 

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரேகாவின் பெற்றோர்கள், ரேகாவின் உடன் பிறந்தோர்கள் வைஜெயந்தி 26, ரேணுகா தேவி 20, கருப்பையா 18 உறவினர்கள் பெண்ணின் தொடையில் ஆசிரியர்கள் அடித்துப் பழுத்திருந்த காயம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இரயில்வே துறை போலீசார் உடற் கூறு பரிசோதனையில் இதனைப்பற்றி குறிப்பிடாமல் பள்ளி நிர்வாகத்திற்குச் சாதகமாக செயல்பட்டுள்ளனர் எனவும் பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் கூறி கல்லக்குடி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்யச் சொல்லியும் நடவடிக்கைகள் எடுக்க வில்லை என்று கூறி 9/3/2020 காலை 9.30 மணி முதல் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கள்ளூர், வேப்பங்குழி, அயன் சுத்தமல்லி கிராம மக்கள் இறந்த மாணவியின் உறவினர்கள் 200 க்கும் மேற்பட்டோர் திரண்டு திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வடுகர்பேட்டை பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். 
 

சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்களும் உறவினர்களும் மாணவியின் இறப்பிற்கு காரணமாக இருந்த மன உளைச்சல் ஏற்படுத்திய பள்ளி விடுதி வார்டன் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோசமிட்டனர். இதனால் சுமார் 1 1/2 மணி நேரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இலால்குடி டிஎஸ்பி தலைமையிலான போலீசார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாணவியின் மரணத்திற்கு காரணமான வார்டனை கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் 10 நாட்கள் அவகாசம் வேண்டும் எனவும் தேர்வுகள் முடிந்தவுடன் விரிவான விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்தனர்.


 

 

மாணவி ரேகா மரணம் பற்றி அவரது தாய்மாமன் ராணுவ வீரர் செல்வராசு நம்மிடம், அந்தப் பள்ளியில் நடைபெறும் சம்பவங்கள் எல்லாமே மர்மம் நிறைந்ததாக உள்ளது. பள்ளியிலிருந்து 200 மீட்டர் தூரத்தில் கல்லக்குடி ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. அங்கிருந்து வந்து ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டது பற்றிய தகவல் காலை முதல் மாலை வரை அந்தப் பள்ளிக்கு தெரியவில்லை என்கிறார்கள். மேலும் இந்தப் பள்ளியில் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரேகா தற்கொலை செய்துகொள்ள புறப்பட்டுச் செல்லும் போது அந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருக்கும். அதையெல்லாம் வெளியே  காட்ட மறுக்கிறார்கள். இந்தப் பள்ளியில் படித்த மாணவிகள் சுமார் நான்கு பேர் இதே போன்று தற்கொலை முயற்சியில் இறங்கியுள்ளனர். அதில் ஒரு மாணவி திருமழப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஒரு மாணவி மாடியில் இருந்து விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்துள்ளார். இதனால் இந்தப் பள்ளியில் காவல்துறை தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். இந்தப் பள்ளி நிர்வாகம் எந்தத் தகவல் கேட்டாலும் கூறுவதற்கு மறுக்கிறார்கள். பெண் பிள்ளைகள் படிக்கும் ஒரு கிறிஸ்தவ நிறுவனம் இப்படிப்பட்ட அவலநிலையில் இருக்கிறது. எனவே தான் ரேகாவின் மரணத்துக்கு நியாயம் கேட்டுப் போராடினோம். போலீசார் ஒருவாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்கள். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ரேகாவின் மரணம் மிகவும் மர்மம் நிறைந்ததாக உள்ளது. நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாவது உண்மையை வெளிக்கொண்டு வருவோம் என்கிறார்.


 

 

ரேகா மரணம் பற்றி அந்தப் பள்ளி நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டோம். நம்மிடம் பேசிய விடுதி வார்டன் திராவிடச் செல்வி, மாணவி ரேகா மரணம் பள்ளியில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் பள்ளி நல்ல முறையில் இயங்கி வருகிறது. மாணவி தற்கொலை என்பது அவரது குடும்ப சூழ்நிலை காரணமாக நடந்துள்ளதாக தெரியவருகிறது. அவர் எழுதி வைத்த கடிதம் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளோம். அதிலுள்ள விபரத்தை நாங்கள் படிக்கவில்லை. மேலும் எங்கள் பள்ளியில் படித்த மாணவிகள் மரணமடைந்ததாக கூறும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அதில் ஒரு மாணவி அவரது சொந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு எங்கள் பள்ளி நிர்வாகம் எப்படி பொறுப்பாக முடியும். பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் குரங்குகளால் தூக்கி எறியப்பட்டு நாசமாகியுள்ளது. அதை சீர் செய்வது கொஞ்சம் காலதாமதம் ஆகியுள்ளது. மற்றபடி எங்கள் பள்ளி மக்களிடம் நல்ல பெயர் எடுத்து வருகிறது. மாணவி ரேகாவின் மரணம் எல்லோருக்கும் வேதனை தரக்கூடியது தான் என்கிறார்.
 

மாணவி ரேகா ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதால் அவரது மரணம் பற்றி விசாரித்து வரும் திருச்சி ரயில்வே போலீசாரிடம் கேட்டோம். மாணவியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனை செய்து அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பிறகு அவரது மரணத்திற்கான காரணம் பற்றிதீவிர  விசாரணை செய்து வருகிறோம். விசாரணை இன்னும் நிறைவடையவில்லை. முழு விசாரணை நடத்தி முடித்த பிறகு ரேகாவின் மரணத்திற்கான காரணம் பற்றி தெரிவிக்கப்படும் என்கிறது ரயில்வே போலீஸ்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

துரை வைகோவிற்கு ஆதரவு திரட்டிய அமைச்சர் அன்பில் மகேஷ்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Minister Anbil Mahesh gathered support for Durai Vaiko

திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில், வருசை ராவுத்தர், சுன்னத் பள்ளிவாசல் அறங்காவலர் அப்துல் சலாம், பள்ளிவாசல் நிர்வாகிகள், திருவெறும்பூர் ஓ.எப்.டி. சிறை மீண்ட அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத் தந்தை  சகாயராஜ் அடிகளார், திருச்சி மலைக்கோட்டை தருமபுரம் ஆதீனம், மௌனமடம் முனைவர் ஸ்ரீமத் மெளன  திருஞான சம்பந்த தம்பிரான் சுவாமிகள், மெத்தடிஸ்ட் தமிழ் திருச்சபை போதகர் பால்ராஜ் மற்றும் ஆலய நிர்வாகிகள், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பனையகுறிச்சியில் அமைந்துள்ள திருக்குடும்ப ஆலயம் அருளானந்தம் அடிகளார் ஆகியோரை சந்தித்து இந்தியா கூட்டணியின் மதிமுக வேட்பாளர் துரை வைகோ ஆதரவு கோரினார்.

சென்ற இடமெல்லாம் துரை. வைகோவுக்கு அனைவரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மக்களின் பிரச்சனைகளுக்காக, உரிமைகளுக்காக குரல் கொடுக்க துரை வைகோவுக்கு ஆதரவு தாருங்கள் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

இந்நிகழ்வில் மாநகர திமுக செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர்கள்  ராஜ் முகம்மது,  மோகன், மணிவேல், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர்கள் கங்காதரன், கே.எஸ்.எம். கருணாநிதி, ஒன்றிய கவுன்சிலர் மகாதேவன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ரொஹையா, சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் மண்டல குழு தலைவர் ஜெயா நிர்மலா, மாமன்ற உறுப்பினர்  பொற்கொடி  ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையடுத்து இன்று காலையில் திருச்சி கேர் கல்லூரியில் தொழிலதிபர் கே.என். ராமஜெயம் நினைவு நாளை ஒட்டி அவரது சிலைக்கு துரை. வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, திமுக மூத்த முன்னோடி திருச்சி செல்வேந்திரன் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரினார். பின்னர் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டினார். இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நிர்வாகிகளைச் சந்திக்கும் துரை வைகோ மாலையில் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.