Skip to main content

மாணவர்களின் தனித்திறன்; உலக சாதனை நிகழ்த்தவிருக்கும் பள்ளி

Published on 03/03/2023 | Edited on 03/03/2023

 

Trichy private school is set to create a world record

 

திருச்சி காஜாமலை தர்கா ரோடு பகுதியில் உள்ளது அல்-ஜமீஅத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி. 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பள்ளியில் தற்போது 300க்கும் அதிகமான அனைத்து தரப்பு மாணவ மாணவிகளும் பயின்று வருகின்றனர்.

 

கடந்த 30 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சியை பெற்று வரும் இப்பள்ளி, கல்வி மட்டுமல்லாமல் மாணவர்களின் தனித் திறமைகளிலும் மிகுந்த கவனம் செலுத்துவதால் மாவட்டம், மாநிலம் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பல வெற்றிக் கோப்பைகளை பெற்றுள்ளது. தற்போது பள்ளியின் முப்பதாவது ஆண்டு விழாவை மிகச் சிறப்பாக கொண்டாடும் வகையில் நமது நாட்டின் 75 ஆவது சுதந்திர ஆண்டினை கொண்டாடும் விதமாக ஒரு குழுவினரால் காகிதக் கோப்பைகளால் உருவாக்கப்படும் உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி (The Largest National Flag Made with paper cups by a Team ) எனும் உலக சாதனையை படைக்க உள்ளது. 

 

இந்த சாதனை நிகழ்வு குறித்து பள்ளியின் தாளாளர் முகமது ஆரிஃப், செயலாளர் அகமதுல்லாஹ், முதல்வர் கமர்த்தாஜ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியபொழுது: "மாணவ மாணவிகளின் தனித் திறமைகளை நிரூபிக்கும் வகையில் இந்த உலக சாதனை நிகழ்ச்சியை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். வரும் 4 மற்றும் 5 ஆகிய தேதிகள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் 320 மாணவ மாணவிகள் மற்றும் 22 ஆசிரியர்கள் கொண்ட குழு பங்கேற்கிறது. சனிக்கிழமை அன்று சுமார் 85 ஆயிரம் காகிதக் கோப்பைகளில் மூவர்ண வர்ணம் பூசி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.30 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி அளவில் தேசியக்கொடி வடிவில் காட்சிப்படுத்த உள்ளோம். இதை ஒரு தேசியக் கடமையாக நினைத்து செய்கிறோம்.

 

இந்த மாபெரும் உலக சாதனையை எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி ஆகிய இரண்டு உலக சாதனை நிறுவனத்தின் பிரதிநிதிகள் நேரில் கலந்து கொண்டு ஆய்வு செய்து சான்றிதழ் அளிக்க உள்ளனர். இம்முயற்சி வெற்றிகரமாக நடைபெற்று பிரம்மாண்ட உலக சாதனை படைக்கும் தமிழ்நாட்டின் முதல் பள்ளி என்ற பெருமையை திருச்சி அல்-ஜமீஅத்துஸ் சாதிக் மெட்ரிகுலேஷன் பள்ளி பெரும்” என்று நம்பிக்கை தெரிவித்தனர். மேலும் இந்த சாதனை நிகழ்ச்சிக்காக பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளிடம் ஒரு ரூபாய் கூட கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது என்றும் கூறினார். இந்த சந்திப்பின் போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஜோஸ்பின் ஸ்டெல்லா, பரண்யா, ஜபீன் மற்றும் பிரதீப் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தலைத் தடுக்க தீவிர கண்காணிப்பு; அரிசி ஆலைகளில் எஸ்.பி திடீர் ஆய்வு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Sp conducts surprise inspection of rice mills to prevent smuggling in Trichy

அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கையில் தொடர்ந்து பல இடங்களில் ரோந்து சென்று தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, திருச்சி மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் கண்காணிப்பாளர் சுஜாதா உத்தரவின் படி  திருச்சி மாவட்டத்தில்  காவல்  ஆய்வாளர்  செந்தில்குமார் , உதவி ஆய்வாளர்  கண்ணதாசன் மற்றும் காவலர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மண்டல காவல் கண்காணிப்பாளர் சுஜாதா மணப்பாறையில் உள்ள தனியார் நவீன அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் அரிசி அரவை முகவர் அரிசி ஆலைகளில் ஏதேனும் முறைகேடு நடைபெறுகிறதா? என திடீர் சோதனையில் ஈடுபட்டார். ஆய்வின் போது திருச்சி காவல் ஆய்வாளர் ,உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இருந்தனர். மேலும் திருச்சி மாவட்ட எல்லையோர பகுதிகளில் பல இடங்களில் இக்குழு திடீர் வாகன சோதனைகளில் ஈடுபட்டு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கை கழன்று வெளியே தூக்கி வீசப்பட்ட நடத்துநர்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
conductor was thrown out of the running government bus

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பேருந்து புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து, பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்ஸின் நடத்துநர் இருக்கை நெட்டு போல்டு கழன்று, அதில் அமர்ந்திருந்த நடத்துநர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்து பயணிகள் கூச்சலிட உடனே டிரைவர் பேருந்தை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் கிடந்த நடத்துநரை மீட்டு அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பேருந்தில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு பேருந்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து ஓட்டுநர் சாலையில்  கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார். அதிர்ஷ்டவசமாக  நடத்துநர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும்பேருந்தில் இருக்கை கழன்று நடத்துநர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.