திருச்சி மாவட்டம், கொடியாலம் சுப்பராயன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 42). முக்கொம்பு பகுதியில் மீன்பிடித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வரும் இவர், தனது பைக்கைப் பழுது பார்ப்பதற்காக, குழுமணி மெயின் ரோட்டில் உள்ள மெக்கானிக் கடைக்கு வந்துள்ளார். அப்போது மூன்று பைக்குகளில் வந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை ஓட ஓட சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளது.
கொலை சம்பவத்தைக் கண்ட அப்பகுதி பொது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த திருச்சி மாவட்ட எஸ்.பி. சுஜித் குமார், டி.எஸ்.பி. செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
இதனிடையே, கொலை நடந்த குழுமணி பகுதியில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.