Skip to main content

பாலியல் தொல்லை கொடுத்த மாணவனுக்கு இதுதான் தண்டனையா..? கொதிக்கும் பல்கலைகழக மாணவிகள் !

Published on 07/09/2019 | Edited on 07/09/2019

பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது வெட்கக்கேடான மனித உரிமை மீறலாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடரும் வரை, சமத்துவம் மற்றும் வளர்ச்சி அடைந்து விட்டதாகப் பெண்கள் உரிமை கோர முடியாது. பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கடமை. பணியிடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களுக்குக் கருணை காட்ட முடியாது என உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமையான உத்தரவு பிறப்பித்த நிலையில், திருச்சியில் தேசிய சட்டக்கல்லூரியில் படிக்கும் சக மாணவர் மீது மாணவிகள் பாலியல் புகார் கொடுத்தும் அதன் மீது சரியான நடவடிக்கை இல்லை என்று எதிர்குரல் கொடுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

trichy law college issue

 

 

திருச்சியில் ஸ்ரீரங்கம் தொகுதியில் திண்டுக்கல் மெயின் ரோட்டில் உள்ளது. தேசிய சட்டக்கல்லூரி. இந்தக் கல்லூரியில் இந்தியா முழுவதிலும் இருந்து மாணவ மாணவிகள் படிக்கிறார்கள். இந்தக் கல்லூரியில் கல்லூரி இறுதி ஆண்டுத் தேர்வு எழுதிவிட்டுத் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும் ஒரு மாணவன், கடந்த மே மாதம் நடைபெற்ற கல்லூரி நிறைவு நாள் விழாவில் தனக்குப் பாலியல் தொல்லைக்கொடுத்தாக மாணவி ஒருவர் கல்லூரி புகார் குழுவிடம் புகார் கொடுத்துள்ளார். அந்த மாணவியின் புகார் கல்லூரி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த மாணவனின் மீது அடுத்தது புகார் வர துவங்கி 3 மாணவிகள் தொடர்ச்சியாகப் புகார் அளித்தனர்.

இந்த நிலையில் கல்லூரி விசாரணைக்குழு நடத்திய விசாரணை அடிப்படையில் அந்த மாணவன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்த அறிக்கையைப் பல்கலைகழகத் துணைவேந்தருக்கு அனுப்பி உள்ளது.

இந்த நடவடிக்கை அறிக்கையில் பாலியல் குற்றச்சாட்டில் ஈடுபட்ட மாணவன் குறைந்தது 5 மாதங்களுக்குச் சமூகப்பணியில் ஈடுபட வேண்டும். அதுவரை அந்த மாணவனின் கடைசிப் பருவத்தேர்வு முடிவுகளை வெளிடக்கூடாது. அந்த மாணவர் ஏதேனும் விருது அல்லது அங்கீகாரம் அளிக்கத் தேர்வு செய்யப்பட்டிருப்பின் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பல்கலைகழக வளாகப் புகார் குழு அளித்த பரிந்துரை மீது பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். பாலியல் தொல்லை கொடுத்த அந்த மாணவருக்கு பல்கலைகழகம் வழங்கும் டிசியில் நன்னடத்தையில் பாலியல் தொல்லை புகார் குறித்துக் குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.