திருச்சி திருவானைக்காவல் அகிலா நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). இவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்ட நிலையில், இத்தம்பதிக்கு எட்டு வயதில் ஒரு மகன் உள்ளார். இவர்களுடன் கார்த்திகேயனின் தாயும் வசித்து வந்துள்ளார். கார்த்திகேயன் 3 ஆண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு கார் டிரைவராக வேலைக்குச் சென்றார். அவ்வப்போது விடுமுறையில் ஊருக்கு வந்து செல்வது வழக்கம். அவரது மனைவி தனியார் கார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கார்த்திகேயன் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை 6.45 மணியளவில் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்த கார்த்திகேயனின் மனைவி, வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததாலும், நீண்ட நேரம் கதவைத் தட்டியும் யாரும் திறக்கவில்லை என்பதாலும் உடனே பக்கத்தில் உள்ளவர்களிடம் இது பற்றிக் கூறியுள்ளார். கல்லூரி மாணவர் ஒருவர் ஜன்னல் வழியாகப் பார்த்த போது, கார்த்திகேயன், அவரது தாய், அவரது மகன் ஆகியோர் தூக்குப்போட்ட நிலையில் சடலமாகத் தொங்கிக் கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவர் கீழே இறங்கி வந்து அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று தூக்கில் தொங்கியவர்களின் உடல்களை மீட்டனர். அவர்களின் உடலைக் கண்ட கார்த்திகேயனின் மனைவி கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். இது அங்கிருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து ஸ்ரீரங்கம் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீரங்கம் போலீஸ் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து, இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது, கடிதம் ஒன்று சிக்கியது. அந்தக் கடிதத்தில், “என் சாவுக்கு யாரும் காரணம் அல்ல. தாய், மகன் கஷ்டப்பட கூடாது என்பதற்காக அவர்களை என்னுடன் அழைத்துச் செல்கிறேன்” என கார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து அவரது மனைவி மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குடும்பத் தகராறு காரணமாக கார்த்திகேயன், தாய் மற்றும் மகனைக் கொன்று தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.