தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநிலச் செயலாளர் கொலை வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் சிறுகனூர் எம்.ஆர்.பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது 60). இவர் தமிழ்நாடு விவசாயிகள் இயக்க மாநிலச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை சண்முகசுந்தரம் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இந்த வழக்கில் கொலையாளிகளைப் பிடிப்பதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் 18 வயது சிறுவன் ஒருவன் திருச்சி கீழப்புலியூர் சாலையில் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்ல நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அப்போது சிறுவன் போலீஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சைக்கிளில் சென்ற போது சண்முகசுந்தரம் தன்னை ஆபாச வார்த்தைகளால் திட்டியதால் கொலை செய்தேன் என தெரிவித்துள்ளார்.