Skip to main content

குழந்தை விற்பனை; போலீசில் நாடகமாடிய தாய்

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

trichy district child incident police investigation started 

 

திருச்சியில் பெற்ற குழந்தையை தாய் விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). லால்குடி அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வக்கீல் பிரபு (வயது 42) . வக்கீல் பிரபுவின் அலுவலகம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி கவிதா வந்து சென்றதன் மூலம் பிரபுவுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இதற்கிடையே கவிதா திருமணம் ஆகாமலேயே முறையற்ற உறவால் கர்ப்பம் தரித்துள்ளார். அதைத் தொடர்ந்து 7 மாத கர்ப்பிணியாக இருந்த கவிதா கருவைக் கலைப்பதற்கு பிரபுவின் உதவியை நாடினார். ஆனால் 7 மாத கர்ப்பத்தை கலைப்பதில் சிக்கல் ஏற்படலாம் எனக் கருதிய அவர்கள் கூட்டாகச் சேர்ந்து அந்தக் குழந்தையை விற்றுவிட முடிவு செய்தனர். இந்நிலையில் கவிதாவுக்கு குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து பிரபு அந்தக் குழந்தையை ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால் கவிதாவிடம் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்ததாகக் கூறி அவருக்கு ரூ.80 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட கவிதா அந்தப் பணத்தில் நகைகளை வாங்கியுள்ளார்.

 

இதற்கிடையே குழந்தையை ரூ.3 லட்சத்து ஐம்பதாயிரத்துக்கு பிரபு விற்பனை செய்தது கவிதாவுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் குழந்தை விற்கப்பட்ட தகவலை போலீசாரிடம் மறைத்துவிட்டு குழந்தையை பிரபுவிடம் கொடுத்ததாகவும், அதன் பின்னர் காணாமல் போய்விட்டதாகவும் போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம் விசாரணை நடத்தினார். பின்னர் நடத்தப்பட்ட  விசாரணையில் கவிதாவின் விருப்பத்தின் பேரில் குழந்தையை பிரபுவும் அவரது இரண்டாவது மனைவி பானுவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் சேர்ந்து ரூ.3 லட்சத்து ஐம்பதாயிரத்துக்கு விற்பனை செய்ததும், கவிதா குழந்தை காணாமல் போய்விட்டதாக நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பெற்ற குழந்தையை விற்பனை செய்த கவிதாவை போலீசார் கைது செய்தனர்.

 

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் வக்கீல் பிரபு, அவரது இரண்டாவது மனைவி பானு, பிரபுவின் கார் டிரைவர் ஆகாஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் பிடித்துள்ளனர். இதில் வக்கீல் மீது குழந்தை கடத்தல், சட்டத்துக்கு விரோதமாக விற்பனை செய்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தக் குழந்தையை வக்கீல் பிரபு திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த துர்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணிடம் விற்பனை செய்த தகவலும் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து துர்காவையும் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். துர்காவும் இடைத்தரகராகச் செயல்பட்டு வேறு ஒருவருக்கு அந்தக் குழந்தையை விற்பனை செய்ததாகத் தெரிகிறது. ஆகவே இந்த வழக்கில் மேலும் பலருக்குத் தொடர்பு உள்ளது. குழந்தை எங்கே இருக்கிறது என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. குற்றவாளிகளைப் பிடிக்க டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் 6 சப் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று பிரபு, பிரபுவின் கார் டிரைவர் ஆகாஷ் ,உறையூர்  துர்கா ஆகியோர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மீண்டும் சிக்கிய 4 கோடி'-பறக்கும் படை அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
erode


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப்படுத்தியுள்ளன.

மேலும், தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் இரவு பகல் என சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் தொகையைப் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, கோபி, அந்தியூர், பவானி சாகர் என மாவட்டம் முழுவதும் உள்ள 8 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரைத் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையின் போது, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.4 கோடியே 28 லட்சத்து 20 ஆயிரத்து 303 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் உரிய ஆவணங்கள் காண்பித்ததால் ரூ.2 கோடியே 95 லட்சத்து 65 ஆயிரத்து 213 சம்பந்தப்பட்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதம் 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரத்து 90 ரூபாய் பணம் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் பாஜகவின் நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் அது தொடர்பாக அவருக்கு போலீசார் சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.