Skip to main content

குழந்தை விற்பனை; போலீசில் நாடகமாடிய தாய்

Published on 09/01/2023 | Edited on 09/01/2023

 

trichy district child incident police investigation started 

 

திருச்சியில் பெற்ற குழந்தையை தாய் விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). லால்குடி அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வக்கீல் பிரபு (வயது 42) . வக்கீல் பிரபுவின் அலுவலகம் லால்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே அமைந்துள்ளது. இங்கு அடிக்கடி கவிதா வந்து சென்றதன் மூலம் பிரபுவுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. இதற்கிடையே கவிதா திருமணம் ஆகாமலேயே முறையற்ற உறவால் கர்ப்பம் தரித்துள்ளார். அதைத் தொடர்ந்து 7 மாத கர்ப்பிணியாக இருந்த கவிதா கருவைக் கலைப்பதற்கு பிரபுவின் உதவியை நாடினார். ஆனால் 7 மாத கர்ப்பத்தை கலைப்பதில் சிக்கல் ஏற்படலாம் எனக் கருதிய அவர்கள் கூட்டாகச் சேர்ந்து அந்தக் குழந்தையை விற்றுவிட முடிவு செய்தனர். இந்நிலையில் கவிதாவுக்கு குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து பிரபு அந்தக் குழந்தையை ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாகக் கூறப்பட்டது. ஆனால் கவிதாவிடம் ரூ.1 லட்சத்துக்கு விற்பனை செய்ததாகக் கூறி அவருக்கு ரூ.80 ஆயிரத்தை கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட கவிதா அந்தப் பணத்தில் நகைகளை வாங்கியுள்ளார்.

 

இதற்கிடையே குழந்தையை ரூ.3 லட்சத்து ஐம்பதாயிரத்துக்கு பிரபு விற்பனை செய்தது கவிதாவுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் குழந்தை விற்கப்பட்ட தகவலை போலீசாரிடம் மறைத்துவிட்டு குழந்தையை பிரபுவிடம் கொடுத்ததாகவும், அதன் பின்னர் காணாமல் போய்விட்டதாகவும் போலீஸ் அலுவலகத்தில் புகார் செய்தார். இது தொடர்பாக லால்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஜய் தங்கம் விசாரணை நடத்தினார். பின்னர் நடத்தப்பட்ட  விசாரணையில் கவிதாவின் விருப்பத்தின் பேரில் குழந்தையை பிரபுவும் அவரது இரண்டாவது மனைவி பானுவும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகியோர் சேர்ந்து ரூ.3 லட்சத்து ஐம்பதாயிரத்துக்கு விற்பனை செய்ததும், கவிதா குழந்தை காணாமல் போய்விட்டதாக நாடகமாடியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பெற்ற குழந்தையை விற்பனை செய்த கவிதாவை போலீசார் கைது செய்தனர்.

 

பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் வக்கீல் பிரபு, அவரது இரண்டாவது மனைவி பானு, பிரபுவின் கார் டிரைவர் ஆகாஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் பிடித்துள்ளனர். இதில் வக்கீல் மீது குழந்தை கடத்தல், சட்டத்துக்கு விரோதமாக விற்பனை செய்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தக் குழந்தையை வக்கீல் பிரபு திருச்சி உறையூர் பகுதியைச் சேர்ந்த துர்கா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணிடம் விற்பனை செய்த தகவலும் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து துர்காவையும் போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். துர்காவும் இடைத்தரகராகச் செயல்பட்டு வேறு ஒருவருக்கு அந்தக் குழந்தையை விற்பனை செய்ததாகத் தெரிகிறது. ஆகவே இந்த வழக்கில் மேலும் பலருக்குத் தொடர்பு உள்ளது. குழந்தை எங்கே இருக்கிறது என இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. குற்றவாளிகளைப் பிடிக்க டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள் 6 சப் இன்ஸ்பெக்டர்கள் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இன்று பிரபு, பிரபுவின் கார் டிரைவர் ஆகாஷ் ,உறையூர்  துர்கா ஆகியோர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.