திருச்சி மாவட்டம் முசிறி அருகே திருஈங்கோய்மலை என்ற இடத்தில் சாலையோரத்தில் ஆம்னி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு பக்தர்கள் உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம் கொலப்பலூர் கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் திருநள்ளாறு சென்று விட்டு திரும்பிய போது டிரைவர் கண் அசந்த நேரத்தில் சாலையிலிருந்து விலகி பள்ளத்தில் இருந்து விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது ஆம்னி வேனில் ஏற்பட்ட கேஸ் கசிவு காரணமாக வேன் வெடித்து தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.
இதில் டிரைவர் மணிகண்டன் (27), பக்தர் மயில்சாமி (29) உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இவர்களுடன் வந்த லோகநாயகி (27), ஆறுமுகம் (56), செல்லம்மாள் (50), விஸ்வநாதன் (45), யுவதிஷ் (6) ஆகியோர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த தொட்டியம் போலீசார் மற்றும் முசிறி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும் காயமடைந்தவர்களை மீட்டு முசிறி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு மேல்சிகிச்சைக்காக அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதனிடையே உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.