திருச்சி மாநகராட்சியுடன் லால்குடி மற்றும் முசிறி பகுதிகளில் உள்ள கிராமப்புற பகுதிகளை இணைத்து, விரிவுபடுத்த திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கருத்துக் கேட்பு கூட்டம் திருச்சி மாவட்ட கலையரங்கத்தில், மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இதேபோல் லால்குடி, முசிறி பேரூராட்சிகளை நகராட்சிகளாக உயர்த்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் என பல தரப்பினரும் கலந்துகொண்டனர். கூட்ட முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் சிவராசு, “விவசாய தொழிலாளர்கள் அதிகம் உள்ள பகுதிகளை ஆய்வு செய்துவருகிறோம். மாநகராட்சி விரிவாக்கம் என்பது நம் விருப்பத்திற்கானது அல்ல; அதற்குப் பல்வேறு விதிகள் உள்ளன. விதிகளின் அடிப்படையில்தான் விரிவாக்கம் இருக்கும். மாநகராட்சி விரிவாக்கம் திருச்சிக்கு கண்டிப்பாக தேவையான ஒன்று. 75% விவசாய இடங்கள் இருந்தால் கண்டிப்பாக மாநகராட்சியோடு இணைக்க முடியாது; 100 நாள் வேலை பறிபோகும் என்று வதந்தி பரவிவருகிறது. விவசாயத்தை அடிப்படையாக கொண்டுள்ள கிராமங்களை இணைக்க திட்டம் இல்லை. சில பகுதிகளைச் சேர்த்தாலும் கூட 100 நாள் வேலை போன்ற திட்டங்கள் ரத்து செய்யப்படாது” என்று தெரிவித்தார்.