திருச்சி திருவெறும்பர் அருகே உள்ள எச்.ஏ.பி.பி. தொழிலாளர் ஒருவருக்கு கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருடன் வேலை செய்த ஒருவர் அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் தொழிலாளர்கள் இடையே பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவெறும்பர் அருகே மத்திய பாதுகாப்புப் படைகலன் தொழிற்சாலைகளில் ஒன்றான எச்.ஏ.பி.பி. நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் கடந்த 6ஆம் தேதி கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் கொட்டப்பட்டு பகுதியில் நடந்த திருமணம் ஒன்று கலந்து கொண்டது குறிப்பிடதக்கது.
இதனைத் தொடர்ந்து அவர் வேலை செய்த இயந்திரக் கூடம், கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அவர் வசித்துவரும் குடியிருப்புப் பகுதிகளில் தடை செய்யப்பட்டது. மேலும் மருத்துவர்கள் அங்கு உள்ளவர்களிடம் மருத்துவச் சோதனை நடத்தி வருகிறார்கள்.
அவர் தினமும் குடிக்க சென்ற டாஸ்மாக் கடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில் அவருடன் வேலை பார்த்த காட்டூர் கைலாஸ் நகரைச் சேர்ந்த ஒருவரை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துமனை அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொழிலாளர்கள் இடையே பெரிய பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் காட்டூர் அம்மன் நகர் பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலில் வேலை செய்த ஒருவருக்குக் கரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் கடந்த 5ஆம் தேதி முதல் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரியமங்கலத்தில் உள்ள அவருடைய குடும்பத்தினருக்கு இரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளது.
எச்.ஏ.பி.பி. ஊழியருக்கு கரோனோ தொற்று உறுதியானதால் நிறுவனத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும் எனச் சங்கங்களின் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.