Skip to main content

கஞ்சா கடத்தலுக்கு துணைபோன தனிப்படை; அதிரடி காட்டிய காவல் ஆணையர்

Published on 03/02/2024 | Edited on 03/02/2024
Trichy Commissioner who replaced the special force that was involved smuggling of cannabis

தமிழ்நாடு முழுவதும் குற்ற சம்பவங்களை முன் கூட்டியே அறிந்து தடுப்பதற்காகவும், போதை பொருள் விற்பனை, கடத்தல், உள்ளிட்ட விரோதமான செயல்களில் ஈடுபடும் நபர்களை பிடிப்பதற்கு என்று அந்தந்த மாவட்டங்களிலும், மாநகரங்களிலும், காவல்நிலையங்களை தாண்டி, அதிகாரிகள் தங்களுக்கென்று ஒரு தனிப்படையை உருவாக்குவார்கள். அதில் சிறப்பாக பணியாற்றும் காவலர்கள் யார் என்பதை அறிந்து அவர்களைத் தேர்வு செய்து, மாநகரிலும், மாவட்டத்திலும் குற்றங்களை தடுக்கும் விதமாக இந்த தனிப்படை செயல்படும்.

அதேபோல் தான் திருச்சி மாநகரில் அதிகரித்து வரும் குட்கா, கஞ்சா, போதை வஸ்துகள், லாட்டரி உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும், அதில் ஈடுபடும் நபர்களை கைது செய்யவும் 5 பேர் கொண்ட ஒரு தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. அதில் திருச்சி மாநகரில் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றிய குமார் தலைமையில் தலைமைக் காவலர்கள் சங்கராந்தி, ராஜேஸ்குமார், குமார், தங்கராஜ் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவர்கள் மாநகர் பகுதியில் கஞ்சா விற்பனை, லாட்டரி விற்பனை உள்ளிட்டவற்றை தடுக்காமல், குட்காவை தமிழ்நாட்டிற்குள் கொண்டு வரும் பெரிய முதலாளிகளுக்கு விசுவாசமாக இருந்துள்ளனர். அதேபோல் கஞ்சா விற்பனைக்கும் அவர்கள் துணையாக இருந்ததோடு, வெளிநாடுகளுக்கு சென்று அங்கிருந்து குருவியாக தங்கம் கடத்தி வரும் கும்பல்களோடு நெருங்கிய தொடர்பு ஏற்பட்டதோடு, அவர்களிடம் இருந்து கடத்தி வரும் தங்கத்தை அடித்து பிடிங்கும் பணியிலும் இந்த கும்பல் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தமிழகத்தின் முன்னாள் டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு 2.0, 3.0 என்ற திட்டத்தின்கீழ் குட்கா, கஞ்சா போன்றவை தமிழ்நாட்டிற்குள் வருவதை தடுக்க பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதே சமயம் தமிழகம் வழியாக கடத்தப்பட்ட பல்லாயிரம் கிலோ கஞ்சா, குட்கா போன்றவை கடத்தி செல்லும் போதே பறிமுதல் செய்யப்பட்டு, கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால் பெரிய அளவில் குட்காவை மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரும் பெரிய முதலாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக அதை கடத்தி கொண்டுவரும் நபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த குட்கா, கஞ்சா கடத்தல் வழக்குகளில் பெரும்பாலும் காவல்துறையில் பணியாற்றும் தனிப்படையினர் தான் கடத்தல் முதலாளிகளுக்கு உளவாளிகளாக இருந்து வருகின்றனர். அப்படி பெரிய கடத்தல் முதலாளிகளுக்கு தான் இந்த 5 பேர் கொண்ட கும்பலும் உளவாளிகளாக இருந்துள்ளனர். 

இதனையறிந்த திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் 5 பேரையும் நேற்று திடீரென மாநகர ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் மீது தொடர்ந்து பல குற்றசாட்டுகள் முன் வைக்கப்பட்டதையடுத்து அவர்களை் 5 பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். அதே போல் குற்றச்சாட்டு உறையூர் காவல் ஆய்வாளர் ராஜா மீதும் எழுந்ததால், அவருக்கு ஆணையர் மெமோ கொடுத்து எச்சரித்து அனுப்பியுள்ளார். காவல் ஆணையரின் இந்த அதிரடி நடவடிக்கை காவலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தாலும், இந்த தனிப்படையை இயக்கிய உதவி ஆணையர் ஜெயசீலன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், கீழ் உள்ள காவலர்களை பழிகடாவாக்கியுள்ளனர். உயர் அதிகாரிகளின் இதுபோன்ற சம்பவங்களில் எப்போதும் கீழ் நிலையில் உள்ள காவலர்கள் மட்டுமே பாதிக்கப்படுகின்றனர். எனவே உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுப்பார்களா? என்று காவல்துறையினர் வட்டாரங்களில் கிசுகிசுக்க ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்ர்பாக நாம் திருச்சி காவல் ஆணையரை தொடர்பு கொண்டு கேட்டபோது, “உதவி ஆணையர் ஜெயசீலன் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிந்த பிறகு அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியாக தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.