தமிழகம் முழுவதும் பொங்கல் விழா களைகட்டி வரும் நிலையில், அரசு சார்பில் சமத்துவ பொங்கல் விழாவும் தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம் இனாம் குளத்தூர் சமத்துவபுரத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் இன்று (13.01.2023) சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், இ.ஆ.ப. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து வந்து மாட்டு வண்டியை ஓட்டிச் சென்றார். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் உடன் பொங்கல் வைத்து, பொங்கல் விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.