Skip to main content

"நல்ல மாணவர்களாக கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும்" -  திருச்சி காவல் துணை ஆணையர் 

Published on 27/01/2023 | Edited on 27/01/2023

 

trichy city police commissioner advised to medical student in trichy 

 

திருச்சி கி.ஆ.பெ.விஸ்வநாதன் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கான புதிய கூடைப்பந்து விளையாட்டு மைதானத்தை திருச்சி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் இன்று திறந்து வைத்தார். இக்கல்லூரியில் தற்போது மருத்துவம் பயிலும் 750 மாணவர்கள்,   300 முதுகலை மாணவர்கள்,  400 நர்சிங் மாணவர்கள்,   600 பாரா மெடிக்கல் மாணவர்கள் என மொத்தம் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயின்று வரும் நிலையில் மாணவர்களுக்கென்று இருந்த கூடைப்பந்து விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டு தற்போது பிரத்யேகமான கூடைப்பந்து விளையாட்டு மைதானமாக 7.64 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டுள்ளது.

 

இதற்கான துவக்க விழா இன்று மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் அர்ஷியா பேகம் வரவேற்புரையாற்றினார். இதில் திருச்சி மாநகர காவல்துறை துணை ஆணையர் சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் உதவி ஆணையர் கென்னடி, அண்ணல் காந்தி அரசு மருத்துவமனையின் டீன் நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் அருண் ராஜ், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

இவ்விழாவில் சிறப்புரையாற்றிய துணை ஆணையர் சுரேஷ்குமார் பேசுகையில், "மருத்துவம் பயிலக்கூடிய மாணவர்களாகிய உங்களுக்கென்று ஒரு தனி அடையாளமும் கடமையும் உள்ளது. எனவே உங்களுடைய கல்வியில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல் சமூகத்திற்கு பயனுள்ளவர்களாக வாழ முயற்சி செய்ய வேண்டும். இதற்கு தடையாக உள்ள போதைப் பொருள் பழக்கங்களை உடனடியாக தவிர்த்து நல்ல மாணவர்களாக கல்லூரியை விட்டு வெளியேற வேண்டும். மேலும் புதிய மாணவர்களை ராகிங் செய்வது போன்ற தவறான முன்னுதாரணமாக நீங்கள் இருந்து விடக்கூடாது" என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது