Trichy Central prison srilankan tamilians issue

Advertisment

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோரும், வங்கதேசம், நைஜீரியா, சூடான், பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 30 பேரும் உள்ளனர்.

இதில் கைதாகியுள்ள இலங்கைத் தமிழர்கள், பொய் வழக்கில் கைது செய்துள்ள தங்களை, வழக்குகளிலிருந்து விடுதலை பெற்றும், தண்டனைக் காலத்திற்கு மேலும் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்து வைத்துள்ளதாகஅவ்வப்பொழுது போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், ஜாமீனில் வந்தவர்களையும் கைது செய்துள்ளதாகவும், கொடுமையான கரோனா காலத்திலாவது தங்களை விடுதலை செய்ய வேண்டும். குடும்பத்தினரோடு சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து தொடர்ந்து பல்வேறு கட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் கடந்த மாதம் ஈடுபட்டு வந்தனர்.

Advertisment

கடந்த மாதமும் அதேபோல், தங்களை விடுதலை செய்ய வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்கள் மீது போராடியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் கடந்த வாரம் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் (எண் 1) நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், அச்சிறப்பு முகாமிலிருக்கும் 15க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இச்சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூக்க மாத்திரை மட்டுமின்றி, திக்சன் என்பவர் கழுத்தை அறுத்தும், ரமணன் என்பர் தனது வயிற்றுப்பகுதியை அறுத்தும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

அவர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க காவல்துறை ஏற்பாடு செய்துள்ள நிலையில், காலம் கடந்தும் தமிழக அரசு தங்களை விடுதலை செய்யவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.