
திருச்சி மாவட்டம், கருமண்டபம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு களப்பணியாளர்களுக்கு மருத்துவத் தொகுப்பை வழங்கினர்.
அப்போது பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "திருச்சி மாவட்டத்தைப் பொறுத்த வரை கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. திருச்சி அரசு மருத்துவமனையில் தேவையான படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும், சில பகுதிகளிலும் சிகிச்சை மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நமக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை மட்டும்தான் இருக்கிறது. ஆக்சிஜன் உற்பத்தி செய்வது தொடர்பாக பெல் நிறுவனத்தில் கேட்ட போது நாங்களே வெளியில் இருந்துதான் ஆக்சிஜன் வாங்கி வருகிறோம் என்று தெரிவித்தார்கள். நாங்கள் உடனே நாட்டு மக்களை எப்படி காப்பாற்றுவது, ஆக்சிஜன் உற்பத்திச் செய்ய தேவையான நடவடிக்கை எடுங்கள் என்று தெரிவித்தோம். அதைத் தொடர்ந்து, ஆக்சிஜனை உற்பத்தி பணிகள் நடந்து வருகின்றன. இன்னும் ஒரு மாதத்தில் பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும்" எனத் தெரிவித்தார்.