திருச்சி மாம்பழச் சாலையிலிருந்து ஸ்ரீரங்கம் செல்லும் சாலையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் ஏடிஎம் ஒன்று உள்ளது. ஏடிஎம் அறை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு அதன் இணைப்பு மும்பையில் உள்ள தலைமையகத்துடன் இணைக்கப்பட்டு உள்ளது.
இந்த ஏடிஎம்க்கு இன்று அதிகாலை ஒரு மர்ம நபர் வந்துள்ளார். பின்னர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றார் ஆனால் முடியவில்லை. இதற்கிடையே மும்பையில் உள்ள தலைமையகத்தில், ஏடிஎம் அறையின் கண்காணிப்பு கேமரா துண்டிக்கப்பட்ட தகவல் தெரிய வந்தது. இதனையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் மெர்கண்டைல் வங்கி மேலாளருக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து உள்ளனர். உடனே வங்கி மேலாளர் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தபோது ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றது தெரிய வந்தது.
மேலும் அங்குள்ள கண்காணிப்பு காமிராக்களை ஆய்வு செய்தபோது அதிகாலை 2.40 மணிக்கு கொள்ளையன் உள்ளே புகுந்தது தெரிய வந்துள்ளது. சுமார் 40 நிமிடம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளான். ஆனால் பணத்தைக் கொள்ளை அடிக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து பதிவான கை ரேகைகள் மற்றும் தடயங்களை ஆய்வு செய்தனர். தொடர்ந்து போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.