Skip to main content

திருச்சி விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம்! 

Published on 20/04/2022 | Edited on 20/04/2022

 

Trichy Airport Team Members Meeting!

 

திருச்சி பன்னாட்டு விமான நிலைய குழு உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை 11 மணிக்கு விமான நிலைய குழுவின் தலைவர் மற்றும் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில், விமான நிலைய இயக்குநர் தர்மராஜ் உள்ளிட்டவர்களால் நடத்தப்பட்டது. இந்தக் குழுவில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர், திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விமானநிலைய பாதுகாப்பு குழு, பாதுகாப்பு பிரிவு, இந்திய விமானப்படை, தேசிய பாதுகாப்பு குழு, குடியேற்ற பணியகம், சுங்கத்துறையினர், உளவுத்துறை பணியகம், சிறப்பு பணியகம், திருச்சி, மக்கள் தொடர்புத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட விமான நிறுவன அதிகாரிகள், விமானநிலைய அதிகாரிகள் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


இக்கூட்டத்தில் தலைமையேற்ற விமானநிலைய குழு உறுப்பினர் தலைவர், பாதுகாப்பு கருதி அடிப்படை தேவைகள் மற்றும் தொழில்நுட்ப விபரக்குறிப்பு, தற்போதுள்ள பன்னாட்டு விமானநிலைய குழு உறுப்பினர்களின் விபரங்களை புதுப்பித்தல், கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் விவாதிக்கபட்ட விவரங்களை நடைமுறைப்படுத்தப்பட்டது சம்பந்தமாகவும் மற்றும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை, ஒத்திகை சம்பந்தமாகவும் விவாதிக்கப்பட்டது. மேலும், விமானநிலைய விரிவாக்க பணிக்கு இடையூறாக இருக்கும் குடியிருப்பு பகுதியினை அப்புறப்படுத்தவும், அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் / குடிசை மாற்று வாரியம் மூலமாக உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து தருவது குறித்தும், தேசிய நெடுஞ்சாலை 210 விமான ஓடுதளத்தில் அருகாமையில் இருப்பதால், பாதுகாப்பு கருதி தரைவழிப்பாலம் அல்லது சாலையின் உயரத்தை குறைப்பது பற்றியும் விவாதிக்கப்பட்டது. 


விமான கடத்தல் ஒத்திகையின்போது தேசிய பாதுகாப்பு குழுவினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து அவர்களையும் வைத்து ஒத்திகை செய்வது என்றும், கடந்த கூட்டத்தில் சிசிடிவி அதிகமாக வெளிப்பகுதிகளில் அமைத்தால் கடத்தல் செய்பவருக்கும், கடத்தலுக்கு உடந்தையாக இருப்பவரையும் எளிதில் கண்காணித்து கடத்தலை தடுக்க முடியும் என்றும் வெளியே வாகன நிறுத்துமிடங்களில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. மேலும் தேசிய பாதுகாப்புப்படை கமாண்டென்ட் அபிமன்யூமாக்ஸ் இக்கூட்டத்தில், புதுடெல்லியிலிருந்து காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்டு அவசர காலங்களில் பயன்பாட்டிற்காக விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள ஹெலிபேட் மற்றும் அருகாமையில் உள்ள மாற்று விமான நிலையம் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும் திருச்சி மாநகர காவல் ஆணையர், விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கொண்டு ரோந்து பணியை தீவிரப்படுத்துவது குறித்தும், விமானநிலையத்தின் நுழைவாயில் மற்றும் வெளியே செல்லும் பகுதியில் காவலர் சாவடி அமைப்பது பற்றியும் விமானநிலைய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆலோசனை வழங்கினார்.

 

 

சார்ந்த செய்திகள்