மத்திய அரசின் தனியார்மயமாக்கும் திட்டங்களின்படி, தொடர்ந்து பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரை வார்க்கப்படும் நிலையில், தற்போது மத்திய அரசு நிதி ஆயோக் உதவியுடன் தேசிய பணமாக்குதல் என்ற திட்டத்தின் கீழ் திருச்சி விமான நிலையத்தை தனியாருக்கு குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய பணமாக்குதல் திட்டத்தின் கீழ் வருவாய் தரக்கூடிய அரசு சொத்துக்களை தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட்டு அதன் மூலம் 6 லட்சம் கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளது மத்திய அரசு.
அதில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், நிலக்கரி சுரங்கங்கள், தேசிய நெடுஞ்சாலைகள் ஆகியவற்றை தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 2021 முதல் 2025 வரையிலான இந்த காலகட்டத்தில் தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் 15 ரயில் நிலையங்கள், 25 விமான நிலையங்கள், 160 சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிலும் தற்போது தமிழகத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் விமான நிலையங்கள் தனியார் வசம் செல்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின்கீழ் திருச்சி விமான நிலையம் முதலில் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து மதுரை, கோவை விமான நிலையங்களும் அடுத்தபடியாக சென்னை விமான நிலையமும் குத்தகைக்கு தனியார் வசம் ஒப்படைக்கப்படுகிறது.
இது குறித்து பேசியுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தேசிய பணமாக்கும் திட்டம் என்பது அரசு நிறுவனங்கள் மீது தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்த நிறுவனங்களைத் தனியாரிடம் குத்தகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாய் புதிய திட்டங்களைத் தொடங்குவதற்கு முன் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தப்படும்” என்றார். இதைத் தொடர்ந்து சுமார் ஆறு மாத காலத்திற்குள் தனியார்மயமாக்களுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.