Skip to main content

கிராம மக்களின் மோதல் எதிரொலி! ஆட்டை கொன்று நடுரோட்டில் தொங்கவிடப்பட்ட மர்ம நபர்கள்!

Published on 23/01/2019 | Edited on 23/01/2019
r

 

திண்டுக்கல்,  திருச்சி மாவட்ட எல்லைப் பகுதி மக்கள் இடையே மோதல் எதிரொலியாக மர்ம நபர்கள் சிலர் ஆட்டைக் கொன்று நடுரோட்டில் தொங்கவிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அய்யலூர் அருகே சுக்காவழி கிராமம் உள்ளது. இந்த கிராமம் திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.  இக்கிராமத்தின் ஒரு பகுதி திண்டுக்கல் மாவட்டத்திலும் மற்றொரு பகுதி திருச்சி மாவட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளது இந்த இரு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவதும் அவர்களை இரு பகுதிகளை சேர்ந்த பெரியவர்கள் சமாதானப்படுத்துவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது.

 

 இந்த நிலையில்தான் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவரின்  ஆட்டை மர்ம நபர்கள் திருடி அதை  கொன்றுள்ளனர். அதன்பின் அந்த ஆட்டை ஊர் எல்லையில் நடுரோட்டில் ஆட்டின் உடலை தலைகீழாக கட்டி தொங்க விட்டு சென்றுள்ளனர் இப்படி ஆட்டைக் கொன்று தலைகீழாக குச்சியில் தொங்க விட்டு
இருப்பதைக் கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  உடனே திருச்சி மாவட்ட பகுதியை சேர்ந்தவர்கள் அந்த ஆட்டைக் கொன்று தொங்கவிட்டு இருக்கலாம் என நினைத்து அவரிடம் கேட்டனர்.  ஆனால் அவர்கள் தங்களுக்கு அதை பற்றி எதுவும் தெரியாது என கூறிவிட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.  உடனே  இரு கிராமத்தையும் சேர்ந்த ஊர் பெரியவர்கள் வழக்கம் போல் அவர்களை அழைத்து சமாதானம் செய்தனர்.

 


 இது சம்பந்தமாக ஊர் பெரியவர்கள் சிலரிடம் கேட்டபோது...‌ திண்டுக்கல் திருச்சி மாவட்ட எல்லை பகுதிகளில் சேர்ந்தவர்களையும் மோதவிட்டு அதன் மூலம் பலர் குளிர் காய வேண்டும் என்ற நோக்கத்தில் மர்ம நபர்கள் சிலர் திட்டம் போட்டு ஆட்டை திருடி கொண்டு வந்து  அதை எல்லைப்பகுதியில் தொங்கவிட்டுள்ளனர்.  இதன் மூலம் மக்களிடையே மோதலை உருவாக்க நினைத்தவர்கள்  மீது  போலீஸ் அதிகாரிகள்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்கள். 
இப்படி ஆட்டைக் கொன்று ஊர் எல்லையில் தொங்க விட்ட சம்பவம் திண்டுக்கல் திருச்சி மாவட்ட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்