
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மக்களில் கோத்தர் பழங்குடியின மக்கள் கொல்லிமலை, கோத்தகிரி, திருச்சிக்கடி உள்ளிட்ட 7 ஊர்களில் வசிக்கின்றனர். குன்னூர் அருகே கொல்லிமலையில் கோத்தர் பழங்குடி மக்களின் பாரம்பரிய நடனத்துடன் இரவு முழுவதும் கோவில் திருவிழா நடைபெற்றது.
இவர்களது குல தெய்வமான அய்யனோர் அம்மனோர் திருவிழா (கம்பட்டராயர் திருவிழா) ஆண்டுதோறும் விமர்சையாக நடத்தப்படுகிறது. இந்தப் பண்டிகையின் போது, கோத்தர் பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரிய உடைகளை அணிந்து அய்யனோர் அம்மனோர் தெய்வங்களை வழிபடுவது வழக்கம். இத்திருவிழாவின் போது, கடைசி மூன்று நாட்கள் வீட்டிற்குச் செல்லாமல் கோவில் வளாகத்திலேயே தங்கி பூஜைகள் செய்வதும் வழக்கம். குன்னூர் அருகே உள்ள கொல்லிமலை கோத்தர் பழங்குடி கிராமத்தில் அய்யனோர் அம்மனோர் கோயிலில் கடந்த வாரம் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக வெருகுரி சாஸ்திரம் எனப்படும் பொங்கல் சமைக்க பெண்கள் அனைவரும் கோயிலில் விறகுகளை வைத்து பின் வழிபடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பெண்கள் தங்களின் பாரம்பரிய உடை அணிந்து தங்கள் குலதெய்வத்தை வரவேற்கும் வகையில் தங்களின் பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்து அனைத்து வயது கோத்தர் பழங்குடி பெண்களும் கலந்து கொண்டு நடனமாடினர். பின்பு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும் தங்கள் கோவில் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.