Village

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ளது குமிழியம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் அவர்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகள் உட்பட பலரது பிறந்தநாளின் போது, ஊர் பொது இடங்களிலும், அவர் அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும் மரக்கன்றுகளை வைக்கும் பழக்கத்தைதொன்றுதொட்டு செய்து வருகிறார்கள்.

மரக்கன்று வைப்பதோடு மட்டுமல்ல அது வளர்வதற்கு தண்ணீர் ஆடு, மாடுகள் கடித்துச் சென்று விடாமல் இருப்பதற்கு பாதுகாப்பும் செய்து வளர்த்து வருகிறார்கள். அதேபோன்று திருமணநாள் என்றாலும் மரக்கன்றுகள் நடுவது என்பதை கொள்கையாக வைத்துள்ளனர். அந்த கிராமத்து இளைஞர்கள் பலர் இணைந்து ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு பாதுகாத்து வளர்த்து வருகிறார்கள். இவர்கள் "மரங்களின் நண்பர்கள் " என்ற ஒரு அமைப்பை உருவாக்கி உள்ளனர். இந்த அமைப்பு ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன் இருந்து இளைஞர்களை வழி நடத்துகிறார்.

Advertisment

மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதோடு மட்டுமில்லாமல் ஏற்கனவே இருக்கின்ற மரங்களை அழிவிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று இந்த அமைப்பினர் யோசித்தனர். அதன்படி அமைப்பினர் ஒன்றுகூடி அவர்களுக்குள் ஆலோசனை செய்தனர். அதன்படி ஊர் பகுதியில் அழிவின் விளிம்பில் உள்ள புளிய மரங்களை பாதுகாப்பது என முடிவெடுத்து அதற்காக அவர்கள் செய்த முடிவு வித்தியாசமாக இருந்தது. மரங்களை தெய்வமாக வழிபடுவது என முடிவெடுத்தனர். இதற்காக மரத்தின் அருகில் சூலம் நட்டு மரத்துக்கு மஞ்சள் ஆடை அணிவித்து அலங்காரம் செய்து கற்பூர ஆராதனை நடத்தி வழிபாடு செய்துள்ளனர்.

“எல்லா உயிர்களையும் பாதுகாப்பது இறைவன். எறும்பு முதல்யானை வரை உணவு கிடைக்கிறது என்றால் அதற்கு இறையருள்தான் காரணம். கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிக்கும் இறைவன், அதேபோன்று ஓரறிவு தாவரங்களையும் அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக கடவுளை வழிபடுகிறோம்” என்கிறார்கள் குமிழியம் கிராமத்தில் மரங்களின் நண்பன் அமைப்பினர்.