Skip to main content

‘மரங்களும் உயிர்கள் தான்.. ஆணி அடித்துக் கொல்லாதீர்கள்..’ - ஆணிகளைப் பிடுங்க வைத்த இளைஞர்கள்

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

பள்ளிகளுக்கு மே மாத கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள், கல்லூரிகள் தொடங்க உள்ள நிலையில் தனியார் பள்ளி, கல்லூரிகள் மாணவர்கள் சேர்க்கைக்காக பதாகைகள் வைத்து விளம்பரங்கள் செய்து வருகின்றனர். பலர் சாலையோரங்களில் நிற்கும் பச்சை மரங்களில் ஆணி அடித்து பதாகைகளை தொங்கவிடுவதால் மரங்கள் பட்டுப்போய் சாயும் நிலை ஏற்பட்டுள்ளதால் சமூக ஆர்வலர்களும் இயற்கை ஆர்வலர்களும் மன வேதனையடைந்து வருகின்றனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையம் எதிரில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நட்ட நாவல் மரம், ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வெற்றியின் நினைவாக இளைஞர்கள் நட்ட அத்திமரம் உள்பட நூற்றுக்கணக்கான பச்சை மரங்களில் பட்டுக்கோட்டையைச் சேர்ந்த நீட் கோச்சிங் மையத்தின் விளம்பரப் பதாகைகளை அந்த நிறுவன ஊழியர்கள் ஆணி அடித்து தொங்கவிட்டுள்ளனர். இதனைப் பார்த்த கீரமங்கலம் பகுதி இளைஞர்கள் பட்டுக்கோட்டை பயிற்சி நிறுவனத்தை தொடர்பு கொண்டு பச்சை மரங்களில் விளம்பரப் பதாகை வைக்க அடிக்கப்பட்ட ஆணிகளை உடனே பிடுங்கி அகற்ற வேண்டும் என்றனர்.

 

சில மணி நேரத்தில் கீரமங்கலம் வந்த ஊழியர்கள் தங்கள் நிறுவன பதாகை தொங்கிய மரங்களுக்குச் சென்று பதாகைகளை அகற்றி ஆணிகளையும் பிடுங்கி எடுத்தனர். இனிமேல் எந்தப் பகுதியிலும் பச்சை மரங்களில் பதாகை வைக்க ஆணிகள் அடிக்கக் கூடாது. மரங்களும் உயிர்கள் தான் என்பதை உணருங்கள். இப்படி ஆணி அடித்தே பல நூறு சாலையோர மரங்கள் பட்டுப்போவதற்கு இது போன்ற கல்வி நிறுவனங்கள் தான் காரணம். விளம்பரம் செய்ய எத்தனையோ வழிகள் இருக்கும் போது மரங்களைக் கொன்று தான் விளம்பரம் செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள் என்று கூறினார்கள். இனிமேல் எந்த பச்சை மரங்களிலும் ஆணி அடிக்க மாட்டோம். ஆணி அடித்ததற்காக மன்னிப்பு கேட்கிறோம் என்று கூறி அங்கிருந்து சென்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'உயிருக்கும் ரிஸ்க்; நீர் நிலைக்கும் கேடு' - எல்லை மீறும் இன்ஸ்டா ரீல் அடிக்டர்ஸ்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
'Living Risk; Insta-reels that defy water levels

அண்மைக்காலமாகவே 'மாஸ்' என்ற பெயரில் ஆயுதங்களுடன் இளைஞர்கள், மாணவர்கள் நடந்து வருவது, தாக்குவது, ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்வது போன்ற ரீல்ஸ் வீடியோக்கள் வெளியாகி நடவடிக்கைகளுக்கு உள்ளாகி வருகிறது.

காவல்நிலையத்தின் வாயில்களில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காவல்நிலையத்திலிருந்து வெளியே வருவதுபோல ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட இளைஞர்கள் பலர் கைது செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. இவ்வாறு விதிமீறலில் ஈடுபட்ட இன்ஸ்டா ரீல் வெளியிடும் இளைஞர்கள் அவ்வப்போது கைதாகும் சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மதுரையில் இளைஞர் ஒருவர் நீர் நிலையில் மிகவும் ஆபத்தான முறையில் இன்ஸ்டா வீடியோ எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இளைஞரையும் அதற்கு உதவியவர்களையும் கைது செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது. மதுரை வைகை ஆற்றில் தண்ணீரில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து அந்த நெருப்புக்குள் குதித்து வீடியோ எடுத்து அதனை தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் இளைஞர் ரீல்ஸாக வெளியிட்டுள்ளார். இதுதொடர்பான அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில் நண்பர்கள் உதவியுடன் வைகை ஆற்றில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு அந்த நெருப்பிற்கு நடுவில் அந்த இளைஞர் குதிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. ரீல்ஸ் மோகத்தால் இது போன்ற சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வரும் நிலையில், இது ரீல்ஸ் எடுப்பவர்களின் உயிருக்கு கேடு விளைவிப்பதோடு மட்டுமல்லாது, நீர்நிலைகளில் பெட்ரோல் போன்ற பொருட்களை ஊற்றுவதால் நீர்நிலைகளும் மாசு அடையும். எனவே இதுபோன்ற நபர்கள் மீது உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Next Story

ஐஸ்கிரீம் டப்பாவில் சிக்கிய தலை; எலிக்கும் பிளாஸ்டிக் கேடு

Published on 13/12/2023 | Edited on 13/12/2023
 head stuck in an ice cream can; Plastic is bad for rats

மனிதர்களின் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படும் பாலிதீன் கவர்கள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்ற விலங்குகளுக்கும் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தொடர்பான செய்திகள் அவ்வப்போது வெளியாவது வழக்கம். குறிப்பாக வனத்துறை பகுதிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களை வீசக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதும், கடல் பகுதிகளில் குப்பை கூளமாக தேங்கி நிற்கும் பிளாஸ்டிக் பொருட்களால் கடல் உயிரினங்கள் பாதிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் புதுச்சேரியில் சாப்பிட்டு விட்டு தூக்கி எறிந்த ஐஸ்கிரீம் டப்பாவில் தெரியாமல் தலையை மாட்டிக் கொண்ட எலி அவதிப்பட்டதும் அதை அங்கிருந்த காவலர்கள் மீட்டதும் தொடர்பான  வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

 head stuck in an ice cream can; Plastic is bad for rats

புதுச்சேரி கடற்கரை சாலையில் எலி ஒன்று தலையில் ஐஸ்கிரீம் டப்பாவில் தலை சிக்கியபடி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் லாவகமாக பிடித்து எலியின் தலையில் சிக்கி இருந்த பிளாஸ்டிக் ஐஸ்கிரீம் டப்பாவை அகற்றி மீண்டும் விட்டனர். இந்த  காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.