Skip to main content

புயலில் இழந்த மரங்களை மீட்க நெடுஞ்சாலையில் நடப்பட்ட மரக்கன்றுகள் கவனிப்பின்றி கருகும் அவலம்

Published on 03/03/2020 | Edited on 03/03/2020

கடந்த 2018 நவம்பர் 16 ந் தேதி அதிகாலை புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப் போட்டது. விடியும் போது ஒட்டு மொத்த மரங்களும், மின்கம்பங்களும், விளை பயிர்களும், வீடுகளும் உடைந்து தரைமட்டமாக கிடந்தது. வீட்டைவிட்டு வெளியே போக வழியில்லை. மொத்த வாழ்க்கையும் அழிந்துவிட்டதாக உணர்ந்தார்கள் மக்கள்.

சில மணி நேரம் அமைதியாக இருந்த இளைஞர்கள் அரிவாளுடன் களமிறங்கினார்கள். சாலைகளில் விழுந்துகிடந்த மரங்களை வெட்டி அகற்றினார்கள். சில நாட்களில் மொத்த போக்குவரத்தையும் விட்டனர். அத்தோடு நிற்காமல் இழந்த மரங்களை மீட்க வேண்டும் என்பதை உணர்ந்த இளைஞர்கள் கிராமங்கள் தோறும் அடுத்தடுத்து லட்சக் கணக்கில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் தொடங்கினார்கள். நீடாமங்கலம் பகுதியில் வேகமாக வளரக் கூடிய மரப்போத்துகளை நட்டு வளர்த்து வருகின்றனர். அதன் பிறகு எந்த ஒரு விழா என்றாலும் மரக்கன்றுகள், விதைப் பந்துகள் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

 

Tree planting on highway to restore lost trees in storm

 

சமீபத்தில் கூட அமைச்சர் விஜயபாஸ்கர் தனக்கு யாரும் சால்வை அணிவிக்க வேண்டாம். மரக்கன்றுகள் நட்டு வளருங்கள் என்றார். இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஒன்றியத்தில் சாலை ஓரங்களில் நின்ற ஆயிரக்கணக்கான புளி, ஆல், அரசு, வேலா போன்ற மரங்கள் சாய்ந்துவிட்டதையறிந்து கிராமங்கள் தோறும் இளைஞர்கள் மரக்கன்றுகுள் நடப்படுவதைப் பார்த்து நெடுஞ்சாலை ஓரங்களில் உயரமான மரக்கன்றுகளை நட்டு ரூ. 50 செலவில் கூண்டுகளை வைத்து பாதுகாப்பதுடன் வாரத்தில் சில நாட்கள் தண்ணீர் ஊற்றினார்கள் நெடுஞ்சாலைப் பணியாளர்கள். அதனால் அந்த மரக்கன்றுகள் வேகமாக வளரத் தொடங்கியது. இதை நக்கீரன் உள்பட பல பத்திரிகைகளும் செய்திகாள வெளியிட புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் சுமார் 20 ஆயிரம் மரக்கன்றுகளை நெடுஞ்சாலை ஓரங்களில் நட்டனர். அப்போது மழை பெய்தது. கூண்டு அமைத்து சில நாட்கள் தண்ணீர் ஊற்றினார்கள்.
 

தற்போது.. ஆலங்குடிக்கு கிழக்கு பகுதியில் வழக்கம் போல தண்ணீர் ஊற்றப்படுகிறது. ஆனால் ஆலங்குடிக்கு மேற்கே விராலிமலை வரை கன்றுகளுக்கு தண்ணீரும் ஊற்றவில்லை. கன்றுகளை பராமரிக்கவும் இல்லை. கூண்டுகள் உடைந்து கிடக்கிறது. தண்ணீர் இன்றி மரக்கன்றுகள் வாடி வதங்கி கருகிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இளைஞர்கள் நட்ட மரக்கன்றுகளை பாதுகாத்து வருகிறார்கள். நெடுஞ்சாலை ஓரங்களில் இழந்த மரங்களை மீட்க பல லட்சம் அரசுப் பணத்தை எடுத்து செலவிட்ட நெடுஞ்சாலைத்துறை நட்ட கன்றுகளை பராமரிக்காமல் இப்படி பாதியில் விட்டதால் அத்தனை மரக்கன்றுகளும் கருகும் நிலைக்கு வந்துவிட்டது. 

 

kaja strom


கோடைக்கு வாரத்திற்கு ஒரு நாள் தண்ணீர் ஊற்றினால் கூட அந்தக் கன்றுகள் பிழைத்துக் கொள்ளும். இல்லை என்றால் அரசாங்க பணம் அத்தனையும் இழப்பு தான். இதை அதிகாரிகள் உணர்ந்தால் நல்லது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் உயிர் போகும் நிலையில் உள்ள மரக்கன்றுகளை உயிர் காக்கலாம். திருவாரூர் மாவட்டத்தில் கிரீன் நீடா அமைப்பினர் சாலை ஓரங்களில் வைத்துள்ள மரபோத்துகள் நல்ல நிலையில் துளிர்விட்டுள்ளதால் கோடை வெயிலை சமாளிக்க லாரியில் கொண்டு வந்து தண்ணீர் ஊற்றுகிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் பெரிய மரங்களாக வளரும். ஆனால் புதுக்கோட்டை மாவட்டத்தில்?

தனக்கு பரிசுக்கு பதிலாக மரக்கன்றுகள் கொடுங்கள், மரக்கன்றுகளை நட்டு வளருங்கள் என்று சொன்ன அமைச்சர் விஜயபாஸ்கரின் கல்லூரி இருக்கும் விராலிமலை சாலையில் மேட்டுச்சாலை பகுதியில் தான் அதிகமான மரக்கன்றுகள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. தினமும் அந்த வழியாக பயணிக்கும் அமைச்சர் அதை கவனிக்கவில்லை போல.. இனியாவது அந்த மரக்கன்றுகளின் உயிர் காக்க உத்தரவிட்டால் நல்லது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வேங்கைவயல் விவகாரம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
The vengaivayal Affair Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20 நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அதன்படி கடந்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் இந்த வழக்கை விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள புதுகோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் 3 பேருக்கு குரல் மாதிரி பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. 

Next Story

பணிமனையிலிருந்து கடத்தப்பட்ட அரசு பேருந்து; அதிர்ச்சியளிக்கும் பின்னணி

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
government bus hijacked from the workshop met with an accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இரவு நேரங்களில் பணிமனைக்கு வரும் பேருந்துகளில் பழுதுபார்க்க வேண்டிய பேருந்துகளை பணிமனைக்குள்ளும் மற்ற பேருந்துகளை சாலை ஓரத்தில் நீண்ட வரிசையாகவும் நிறுத்திவிட்டு ஓட்டுநர் நடத்துநர்கள் ஓய்வுக்கு செல்வது வழக்கம்.

நேற்று இரவும் இதே போல சாலை ஓரம் 12 பேருந்துகள் நிறுத்தப்பட்டிருந்தது. ஊழியர்கள் ஓய்வு அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டனர். இன்று சனிக்கிழமை அதிகாலையில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் அரசு பேருந்து ஒன்று கண்டெய்னர் லாரியில் மோதி விபத்து என்று தகவல் வர போக்குவரத்து கழக அதிகாரிகள் வெளியே சென்று பார்த்த போது அறந்தாங்கியில் இருந்து திருவாடனை செல்லும் TN 55 N 0690 பேருந்தை காணவில்லை. அந்த பேருந்து தான் விபத்திலும் சிக்கியிருந்தது தெரிய வந்தது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து பார்த்த போது கண்டெய்னர் ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு நபர் நான் தான் பஸ் ஓட்டி வந்தேன் என்று சொல்லிக்கொண்டிருக்க அவரைப் பார்த்த பலரும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று அவரை கண்டுகொள்ளவில்லை.

government bus hijacked from the workshop met with an accident

ஆனால் அந்த நபரோ நான் தான் பஸ் ஓட்டுனேன் லாரியில மோதிடுச்சு. அதுல எனக்கு கால்ல சின்ன காயம் பாருங்க என்று காலில் உள்ள சிறிய ரத்த காயத்தை காட்டியுள்ளார். அதன் பிறகு அந்த நபர் அறந்தாங்கி அழைத்துவரப்பட்டு விசாரிக்கும் போது ஒரே பதில் தான், ‘நான் தான் பஸ் எடுத்துடு போனேன். லாரியில மோதிடுச்சு கால்ல காயம்...’ என்ற ஒன்றைத் தவிர வேறு எதுவும் சொல்லத் தெரியவில்லை. அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

போலீசார் தலைசுற்றி நிற்க அந்த நபரின் படத்தைப் பார்த்ததும் நமக்கு கடந்த 13 ந் தேதி அறந்தாங்கி அருகே ஆவணத்தான்கோட்டையில் இருந்து ஒரு டாடா ஏஜ் வாகனத்தை எடுத்துக் கொண்டு 15 கி மீ தூரம் சென்றதும் கீரமங்கலம் கடந்து ஆவணத்தில் வைத்து பிடிக்கப்பட்டதும் தெரிந்ததால் 13 ந் தேதி எடுக்கப்பட்ட அந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபரின் படத்தை தேடிப் பார்த்த போது இரண்டும்ஒரே நபர் தான். கடந்த வாரம் டாடா ஏஸ் வாகனம் ஓட்டிய அன்று அணிந்திருந்த அதே சட்டை தான் இன்று பஸ் எடுத்துச் சென்ற போதும் போட்டிருந்தார்.

நன்றாக வாகனம் ஓட்டத் தெரிந்த இந்த நபர் ஏதோ காரணங்களால் மனநலம் பாதிக்கப்பட்டு ஊர் ஊராக சுற்றிதிரிந்தாலும் வாய்ப்புக் கிடைக்கும் போது வாகனங்களை ஓட்டிச் சென்றுவிடுகிறார் என்பது தெளிவாகிறது. நேற்று இரவு இந்த நபர் தான் பணிமனை அருகே சுற்றிவந்தார் என்கிறார்கள் போக்குவரத்துக்கழக ஊழியர்கள். மனநலம் பாதிக்கப்பட்ட இந்த நபரால் இதுவரை 2 சம்பவங்கள் நடந்துள்ளது. இவரை மனநல சிகிச்சை மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்காமல் வெளியில் விட்டால் இன்னும் எத்தனை வாகனங்களை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்துவாரோ? என்று கவலை தெரிவிகின்றனர் அப்பகுதியினர்.