Skip to main content

தாண்டிக்குடி மலைப்பாதையில் பேருந்து மீது மரம் விழுந்து விபத்து! பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்!!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

A tree fell on a bus on the Thandikudi hill road. Passengers fortunately survived !!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாண்டிக்குடி மலைப் பாதையில் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து மீது திடீரென மரம் விழுந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

 

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான கொடைக்கானல், தாண்டிக்குடி ஆகிய மலைப்பகுதிகளில் தொடர் மழை காரணமாக அவ்வப்போது சாலையில் பாறைகள் உருண்டும், மரங்கள் சரிந்தும்வருகின்றன. இந்நிலையில், இன்று (29.11.2021) காலை, தாண்டிக்குடியிலிருந்து வத்தலக்குண்டு நோக்கி அரசுப் பேருந்து காமணூர் வழியாக வந்துகொண்டிருந்தது. பேருந்தில் ஓட்டுநர் கருப்பையா, நடத்துனர் ஞானசேகர் மற்றும் 12 பயணிகள் இருந்தனர். 

 

பேருந்து மலை சாலையில் வந்துகொண்டிருந்தபோது, கொடலங்காடு என்ற இடத்தில் சாலையோரத்தில் இருந்த மிகப்பெரிய மரம் ஒன்று திடீரென சரிந்து பேருந்து மீது விழுந்தது. அதேசமயம் அந்த மரத்தின் எதிரே இருந்த மற்றொரு மரத்தின் மீது இம்மரம் தாங்கி நின்றது. இதனால், பேருந்தின் மீது மரம் முழுமையாக விழவில்லை. இருப்பினும் பேருந்தின் பின் பகுதியில் மரம் விழுந்ததில் பேருந்து சேதமடைந்தது. பயணி ஒருவர் மட்டும் லேசான காயமடைந்தார். பயணம் செய்த அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கொடலங்காடு பகுதியில் அதிக போக்குவரத்து இல்லாததால் வேறு எதுவும் பாதிப்பு ஏற்படவில்லை. மரங்களை அகற்றி பேருந்தை மீட்கும் முயற்சியில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மலைப் பாதையில் பேருந்து மீது மரம் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் மலைக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுபோல் தாண்டிக்குடியிலிருந்து கொடைக்கானல் வரை செல்லும் மலைப்பகுதிகள் மற்றும் கொடைக்கானல் மேல்மலை, கீழ் மலைப் பகுதிகளிலும் தொடர் மழையின் காரணமாக மண் சரிவு மற்றும் மரங்களும் ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றன. இதனால், மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கொடைக்கானலுக்கும், திண்டுக்கல்லுக்கும் வர முடியாமல் தவித்துவருகிறார்கள். 

 

மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் உடனடியாக மலைப்பாதைகளில் ஏற்பட்டுவரும் மண்சரிவுகளையும், மலையில் விழுந்து கிடக்கும் மரங்களையும் விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துவருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கொடைக்கானலில் 'காட்டுத்தீ' - சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
'Forest Fire' in Kodaikanal Hill

கொடைக்கானலில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக மலைப்பகுதிகளில் கோடைக்காலங்களில் காட்டுதீ ஏற்படும் நிலையில், சீதோஷ்ன நிலை மாற்றத்தின் காரணமாக தற்போதே காட்டுத்தீ ஏற்படும் சூழல் அதிகரித்துள்ளது. கடந்த 10 நாட்களாக கொடைக்கானலில் ஒரு சில பகுதிகளில் காட்டுத்தீ பற்றி எரிந்து வருகிறது. வனப்பகுதிகள் மட்டுமல்லாது வனப்பகுதியை ஒட்டியுள்ள பட்டா நிலங்களிலும் தீயானது பரவி வருகிறது. குறிப்பாக கொடைக்கானல் பெருமாள் வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

இதனால், கிட்டத்தட்ட 50 ஏக்கருக்கு மேற்பட்ட வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. தொடர்ந்து வனச்சரக பணியாளர்கள் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ தடுப்பு கோடுகள் இடப்பட்டுள்ளதால் விரைவில் தீ பரவல் கட்டுப்படுத்தப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சுற்றுலா பயணிகளுக்கும் உள்ளூர்வாசிகள் மூலம் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வெளியான மலையாள திரைப்படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் வரவேற்பை பெற்ற நிலையில் அதில் இடம்பெற்றுள்ள குணா குகையை பார்வையிட இந்த கோடையில் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், காட்டுத்தீ சம்பவங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி அன்று தேனி, குரங்கணி பகுதியில் கொழுக்குமலை அருகே ஏற்பட்ட காட்டுத்தீயில், ட்ரெக்கிங் சென்ற 23 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

கொடைக்கானல் மலைப்பாதையில் விபத்து; பயணிகள் காயம்

Published on 16/02/2024 | Edited on 16/02/2024
incident on Kodaikanal Hill Pass Passenger issue

கொடைக்கானல் மலைப்பாதையில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பலர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு செல்லக்கூடிய மலைப்பாதையில் அடிவாரத்தில் இருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் டம்டாம் பாறை என்ற இடம் உள்ளது. இங்கு கொடைக்கானலில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி அதிவேகமாக டிப்பர் லாரி ஒன்று வந்துள்ளது. அதே சமயம் வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானலுக்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது.

இந்நிலையில் டம்டாம் பாறை அருகே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி எதிரே வந்த தனியார் பேருந்து மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் சிக்கி பேருந்தில் இருந்த 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் பேருந்தின் முன்பகுதியில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் 300 அடி பள்ளத்தாக்கில் விழுந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மாயமான பெண்ணை அங்குள்ள பொதுமக்கள் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.