Skip to main content

தொடர் விடுமுறை தினங்கள்; களைகட்டிய பிச்சாவரம்

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

travellers celebrates in pichavaram mangrove forest 

 

சிதம்பரம் அருகே 15 கி.மீ. தூரத்தில் உள்ள கிள்ளை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளது. இங்கு கடற்கரை முகத்துவாரப் பகுதியாக உள்ள உப்பனாற்றில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 3,500 கால்வாய்களுடன் சுரபுன்னை மரங்கள் கொண்ட மாங்குரோவ் காடுகள் (சதுப்புநிலக்காடுகள்) அமைந்துள்ளன. மருத்துவ குணம் கொண்ட சுரபுன்னை மரங்கள் 70 சதவீதம் உப்புநீர் 30 சதவிதம் நன்னீரில் வளரக்கூடியது. இது நாட்டின் இரண்டாவது பெரிய சதுப்புநிலக்காடுகள் ஆகும். இதனை வனத்துறையினர் பாதுகாக்கப்பட்ட இடமாகப் பராமரித்து வருகின்றனர்.

 

கீழே தண்ணீரும், தண்ணீருக்கு மேலே பச்சைபசேல் என்று படர்ந்து காணப்படும் சுரபுன்னை மரங்களும் என இயற்கை எழில் மிகுந்து காணப்படும் இந்த மாங்குரோவ் காடுகளைப் படகுகளில் சென்று பார்வையிடுவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதைக் கண்டு மகிழ்வதற்காக உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தினந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கார், வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கிறார்கள்.

 

இங்கு கோடைக்காலங்களில் சீசன் களைகட்டும். அதே நேரத்தில் அரசினர் விடுமுறைக் காலங்களில் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வந்து படகு சவாரி செய்து மகிழ்ந்து செல்வார்கள். இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பள்ளி அரையாண்டு விடுமுறை மற்றும் புத்தாண்டு தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறை என்பதால் கோடை சீசனில் வரும் சுற்றுலாப் பயணிகளைத் தாண்டி அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இவர்கள் குடும்பத்துடன் வந்து இயந்திர மற்றும் துடுப்புப் படகுகளில் படகு சவாரி செய்து மாங்குரோவ் காடுகளில் உள்ள கால்வாய்களுக்கு இடையே படகுகளில் சென்றபடி இருபக்கமும் வளர்ந்து நிற்கும் சுரபுன்னை மரங்களைப் பார்த்து மகிழ்ந்தனர்.

 

படகில் செல்லும் இவர்கள் சுரபுன்னை மரங்களின் வேர், இலை மற்றும் காய் ஆகியவற்றையும் வியப்புடன் ரசித்துப் பார்த்தனர். சுரபுன்னை மரங்களின் அருகில் படகுடன் நின்று புகைப்படம் மற்றும் சுயபடம் எடுத்து மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து, கரைக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சுற்றுலா மைய அலுவலகத்துக்கு அருகே அமைக்கப்பட்ட கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி படகு சவாரி செய்த இடங்களைப் பார்த்து இயற்கையின் அழகை ரசித்தனர். ஊட்டி, கொடைக்கானல், கேரளாவின் ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அதிக செலவு செய்து படகு சவாரி செய்ய முடியாதவர்கள், பிச்சாவரத்தில் மிகவும் குறைந்த கட்டணத்தில் இயற்கை எழில் கொஞ்சும் அழகை ரசித்தவாறு படகு சவாரி செய்து மகிழ்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்