Skip to main content

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!

Published on 03/01/2024 | Edited on 03/01/2024
Transport unions struggle notice

போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த மாதம் வேலை நிறுத்தம் செய்ய இருப்பதாக ஏற்கனவே நோட்டிஸ் வழங்கி இருந்தனர். அதில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அரசு சார்பில் இன்னும் ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தவில்லை, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இருந்தனர்.

இதற்கான பேச்சுவார்த்தை கடந்த 27 ஆம் தேதியும், தற்போதும் நடைபெற்றது, இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் எட்டப்படவில்லை. மேலும் தொழிலாளர்களின் கோரிக்கை தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால் போராட்ட அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

முன்னதாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தை சார்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்