Skip to main content

பைக், சைக்கிளில் பயணிப்போரின் பாதுகாப்பில் அரசு அக்கறை செலுத்தவில்லை: ராமதாஸ் 

Published on 26/12/2019 | Edited on 26/12/2019

 

சாலைகளில் மகிழுந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசுகள், மகிழுந்து வாங்க முடியாமல் இரு சக்கர ஊர்திகளிலும், மிதிவண்டிகளிலும் பயணிப்போரின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவது இல்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

உயிரைக் குடிக்கும் சாலைகள்: போக்குவரத்து கொள்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டும் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்கள் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரிய வந்துள்ள உண்மைகள் மிகவும் அதிர்ச்சியளிப்பவையாக உள்ளன. மகிழுந்துகள் மற்றும் பேருந்துகளில்  செல்வோரின் பாதுகாப்பில் காட்டும் அக்கறையை மிதிவண்டிகள் மற்றும் இரு சக்கர ஊர்திகளில் செல்வோரின் பாதுகாப்பில் மத்திய அரசு காட்டுவதில்லை என்று ஓர் ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

 

cycle


 

இந்தியாவில் சாலை விபத்துகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை குறித்து மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை ஒவ்வொரு ஆண்டும் புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகிறது. மத்திய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரமான அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் தான் உண்மை என்று அனைவரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், அதில் குறிப்பிடப்பட்ட எண்ணிக்கையை விட 50%க்கும் கூடுதலான மக்கள் விபத்துகளில் இறக்கின்றனர் என்பது தான் ஆய்வுகளில் தெரியவந்துள்ள உண்மையாகும்.
 

மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் மருத்துவ உலகின் தலைசிறந்த ஆய்வு இதழாக போற்றப் படும் லான்செட் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. மருத்துவமனைகளில் நடத்தப்படும் உடல்கூறு ஆய்வுகளில் தெரியவரும் இறப்புக்கான காரணங்களின் அடிப்படையில், 2017&ஆம் ஆண்டில்  நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த விபத்துகளில் மட்டும் 2 லட்சத்து 18,876 பேர் உயிரிழந்துள்ளனர். இது அதே ஆண்டில் மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்த எண்ணிக்கையான ஒரு லட்சத்து 47,913&ஐ விட 70,963 அதிகமாகும்.


 

நெடுஞ்சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 2 லட்சத்து 17,379 பேர் இரு சக்கர ஊர்திகளிலும், மோட்டார் வாகனங்களிலும்,  நடந்தும் பயணித்தவர்கள் ஆவர். உயிரிழந்தவர்களில் 76,729 பேர் (35.1%) பாதசாரிகள் ஆவர். 67,524 பேர், அதாவது 30.90 விழுக்காட்டினர் இரு சக்கர வாகனங்களிலும், 57,802 பேர்(26.40%) மோட்டார் வாகனங்களிலும் பயணம் செய்தவர்கள். மிதிவண்டிகளில் சென்றவர்களில் 15,324 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் நியாயப்படுத்த முடியாத அளவுக்கு அதிகம் ஆகும்.
 

உலக அளவில் சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் விகிதம் 1990-ஆம் ஆண்டிலிருந்து 2017-ஆம் ஆண்டு வரையிலான 27 ஆண்டுகளில் 8.10% மட்டுமே அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவில் மட்டும் இந்த விகிதம் 58.70% அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் தவறான போக்குவரத்து கொள்கை தான்.
 

இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு வாகனப் புரட்சி நடைபெற்று வருகிறது. அதற்கு முன் ஓரிரு நிறுவனங்கள் மட்டுமே வாகனத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், இன்று உலகின் அனைத்து நிறுவனங்களின் மகிழுந்துகள் உள்ளிட்ட வாகனங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதனால், சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு சாலைப்பாதுகாப்பின் அளவும், கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படவில்லை. இதனால் தான் இந்தியாவில் சாலைவிபத்தில் உயிரிழப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.


 

இந்தியாவின் போக்குவரத்துக் கொள்கையும், அணுகுமுறையும் மகிழுந்துகள் உள்ளிட்ட வாகனங்களை மனதில் கொண்டே உருவாக்கப்படுகின்றன. வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டால் நாட்டின் பொருளாதாரம்  அதிகரிக்கும் என்ற நம்பிக்கை தான் இதற்கு காரணம் ஆகும். இந்த தவறான நம்பிக்கைக் காரணமாக சாலைகளில் மகிழுந்துகள் உள்ளிட்ட வாகனங்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசுகள், மகிழுந்து வாங்க முடியாமல் இரு சக்கர ஊர்திகளிலும், மிதிவண்டிகளிலும் பயணிப்போரின் பாதுகாப்பில் அக்கறை செலுத்துவது இல்லை.
 

வாகனங்களுக்கு ஆதரவான கொள்கையால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவது மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கும், பொருளாதாரத்திற்கும் கூட பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. உலகில் வளர்ச்சியடைந்த நாடுகள் எதுவும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. பொதுப் போக்குவரத்துக்கு தான் வளர்ந்த நாடுகள் முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்தியாவில் மட்டும் தான்  பொருளாதார வலிமை மிக்க வாகன தயாரிப்பு நிறுவனங்கள் லாபி, தங்களின் செல்வாக்கைப் பயன்படுத்தி  நெடுஞ்சாலைப் போக்குவரத்துக் கொள்கை மற்றும் அணுகுமுறையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதே அணுகுமுறை நீடித்தால் இன்னும் பல பத்தாண்டுகள் ஆனாலும்  விபத்து உயிரிழப்புகள் குறையாது.

 

ramadoss


 

இந்த நிலையை மாற்றி இந்தியாவை சாலைவிபத்துகளில் உயிரிழப்புகள் குறைந்த நாடாக மாற்ற வேண்டும். இதற்காக சாலைகளில் இரு சக்கர ஊர்திகள், மிதிவண்டிகள் ஆகியவற்றுக்கு தனித்தனி தடங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்; நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். அதிவிரைவுப் பேருந்து பாதைகள் (Chennai Bus Rapid Transit System - BRTS ) அமைக்கப்படுவதுடன், பொதுப்போக்குவரத்து வலுப்படுத்தப்பட வேண்டும். இவற்றுக்கெல்லாம் மேலாக நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகள் நிரந்தரமாக மூடப்பட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கம்’ - போக்குவரத்துத் துறை தகவல்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Transport Department Information for Additional Special Bus Operation

முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் மக்கள் தொடர்பு இணை இயக்குநர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “இன்று வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் (26/04/2024) என்பதாலும், நாளை சனிக்கிழமை (27/04/2024) மற்றும் நாளை மறுநாள் ஞாயிறு (28/04/2024) என வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) 280 பேருந்துகளும், நாளை (27/04/2024) 355 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. அதே போன்று சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (26/04/2024) மற்றும் நாளை (27/04/2024) 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இன்று அன்று 280 பேருந்துகளும் மற்றும் நாளை 355 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 55 பேருந்துகளும் மேற்கண்ட இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வார இறுதி நாளான இன்று 9 ஆயிரத்து 276 பயணிகளும், நாளை 5 ஆயிரத்து 796 பயணிகளும் மற்றும் நாளை மறுநாள்  8 ஆயிரத்து 894 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் செயலிமூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள தெரிவிக்கப்படுகிறது” எனக் கூறப்பட்டுள்ளது. 

Next Story

 பெண்களை ஏற்றிச் செல்லாத பேருந்து; ஓட்டுநர் மீது அதிரடி நடவடிக்கை!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Action on the driver for A bus that does not carry women

விக்கிரவாண்டி பகுதியில் இருந்து விழுப்புரத்துக்கு அரசு பேருந்து ஒன்று கடந்த 22ஆம் தேதி, பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது, அந்தப் பேருந்து பை பாஸ் வழியாக செல்லும் போது அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் இருந்த பெண் பயணிகளை ஏற்றிச் செல்லாமல் புறப்பட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக, போக்குவரத்துத் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. 

அந்தப் புகாரின் பேரில், பெண் பயணிகளை ஏற்றிச் செல்லாத அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘22.04.2024 அன்று விழுப்புரம் கோட்டம் விழுப்புரம் கிளை 2-ஐ சார்ந்த டிஎன்32/ என்.2218 தடம் எண்.TIF விக்கிரவாண்டியிலிருந்து விழுப்புரம் வரும்பொழுது சுமார் 8.00 மணியளவில் விழுப்புரம் பைபாஸ் அண்ணாமலை ஹோட்டல் பேருந்து நிறுத்தத்தில் பெண்பயணிகள் கையைக் காட்டியும் பேருந்தை நிறுத்தாமல் சென்றதாக ஊடகத்தின் வாயிலாக புகார் செய்தி வெளிவந்தது. 

அதன் அடிப்படையில், இது குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள விழுப்புரம் மண்டல பொது மேலாளர் உத்தரவின்படி அப்பேருந்தில் பணியாற்றிய ஓட்டுநர் ஆறுமுகம், தற்காலிக வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும், நடத்துநர் தேவராசு பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.