Skip to main content

திருநங்கையைக் கொன்ற இளைஞர் கைது! 

Published on 21/11/2023 | Edited on 21/11/2023

 

transgender passes away case karur police arrested  one

 

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் மேல காவக்காரத் தெருவைச் சேர்ந்த திருநங்கை மணிமேகலை (28). இவர் கடந்த 15ம் தேதி அன்று, கொள்ளிடம் ஆற்றுக்கரை ஓரத்தில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து திருநங்கை சுகன்யா என்பவர் கொள்ளிடம் போலீஸாருக்கு தகவல் அளித்தார்.

 

அதன்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வீ. வருண்குமாா், லால்குடி காவல் துணைக் கண்காணிப்பாளர் அஜய்தங்கம் உள்ளிட்ட போலீஸார் மணிமேகலை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

மேலும், கொலைக்கு பயன்படுத்திய கத்தி, கைரேகையை மோப்பநாய் உதவியுடன் விசாரணை செய்தனர். மேலும் டி.எஸ்.பி. அஜய்தங்கம் தலைமையில் ஆய்வாளர்கள் விதுன்குமார், சுமதி உள்ளிட்ட போலீசார் கொண்ட 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளியைத் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று கும்பகோணம் அருகே மறைந்திருந்த கரூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரைத் தனிப்படை போலீசார் கைது செய்தனர். 

 

ரமேஷிடம் போலீஸார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், கரூர் மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்தவர் திருநங்கையான மணிமேகலை. திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் புதுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ்(25). ரமேஷ், கரூர் மாவட்டத்தில் வீடு கட்டும் கொத்தனார் வேலை செய்து வருகிறார். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருநங்கையான மணிமேகலையுடன் ரமேஷ்க்கு சமூகவலைத்தளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி நேரில் சந்தித்துள்ளனர். நாளடைவில் மணிமேகலை, ரமேஷ் இருவரும் காதலித்து பலமுறை தனிமையில் இருந்து வந்துள்ளனர். 

 

இந்நிலையில் மணிமேகலை, ரமேஷிடம் சேர்ந்து வாழுவோம் என ஆசை வார்த்தைக் கூறி பல லட்சம் ரூபாயை பெற்றுள்ளார். ரமேஷும் சேர்ந்து வாழுவோம் எனும் எண்ணத்தில் கொடுத்து, பலமுறை அவருடன் தனிமையில் இருந்துள்ளார். ஒரு கட்டத்தில், ரமேஷ் மணிமேகலையின் செல்போனை பார்த்துள்ளார். அப்போது அவர், பல ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருந்து வீடியோ எடுத்து அதை சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவு செய்திருப்பது தெரியவந்துள்ளது. 

 

அதன் பிறகு, தான் ஏமாற்றப்பட்டது உணர்ந்து தன்னிடம் வாங்கிய பணத்தை கொடு என மணிமேகலையிடம் ரமேஷ் கேட்டுள்ளார். ஆனால், அவர் தர மறுத்துள்ளார். தொடர்ந்து ரமேஷ், மணிமேகலையை பலமுறை தொடர்பு கொண்டும் போனை எடுக்காமல் தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் வேறொரு நம்பரில் இருந்து ரமேஷ், மணிமேகலையைத் தொடர்பு கொண்டு எனக்கு பணம் வேண்டாம் நாம் ஒன்றாக வாழ்வோம் எனக் கூறியுள்ளார். அதற்கு மணிமேகலை சம்மதம் தெரிவித்து, ‘நான் தற்போது மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ளேன். அங்கே வாருங்கள்’ என அழைத்துள்ளார்.

 

இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவு மணிமேகலை திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை கொள்ளிடம் பாலத்தின் அருகே இருந்துள்ளார். அங்கு வந்த ரமேஷ், மணிமேகலையிடம் ஆசையாகப் பேசி மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். 

 

அப்போது ரமேஷ் தான் கொடுத்த பணத்தை எப்போது தருவாய் எனக் கேட்டுள்ளார். அதற்கு என்னால் பணம் தர முடியாது என மணிமேகலை கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மணிமேகலையின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாக குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடினார் என்பது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட ரமேஷ், திருச்சி நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தி திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.