Skip to main content

கொடூரக் கொலை; அதிர்ச்சியில் உறைந்த ஊர்மக்கள் - தாம்பரத்தில் பதற்றம்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

Transgender incident in Tambaram

 

சென்னை, தாம்பரம் அடுத்த புதூர் மப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் திருநங்கை சஞ்சனா. இவருக்கு 28 வயதாகிறது. இவரது சித்தப்பாவான தீனதயாளன் என்பவரும் மூன்றாம் பாலினத்தவர் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகத் தெருக்கூத்து தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். எந்த இடத்திற்குத் தொழிலுக்குச் சென்றாலும் சஞ்சனா மற்றும் தீனதயாளன் ஆகியோர் ஒன்றாகச் செல்வதே வழக்கம். மேலும், அதில் கிடைக்கும் வருமானத்தில் தங்களது வாழ்வாதாரத்தைப் பாதுகாத்து வந்தனர்.

 

அந்த வகையில், கடந்த 13 ஆம் தேதி இரவு சஞ்சனா தனது சித்தப்பாவான திருநங்கை தீனதயாளனை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது, கூடுவாஞ்சேரி, நந்திவரத்தில் தெருக்கூத்துக்குச் செல்ல வேண்டும் என அவரை அழைத்துள்ளார். அதற்கு தீனதயாளன், “எனக்கு வேறு வேலை இருக்கிறது. நான் வரவில்லை” எனக் கூறியுள்ளார். இதையடுத்து, சஞ்சனாவும் தன்னுடைய வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதையடுத்து, அடுத்த நாள் காலை சஞ்சனா வழக்கம்போல் தீனதயாளனை செல்போனில் தொடர்புகொண்ட போது அவரது நம்பர் சுவிட்ச் ஆஃப் ஆக இருந்துள்ளது. இதனிடையே, தீனதயாளன் வேறு வேலைக்காகச் சென்றிருக்கலாம் என சஞ்சனா நினைத்துக்கொண்டார். 

 

இத்தகைய சூழலில், தீனதயாளனின் அண்ணனான முத்துப்பாண்டி என்பவர் சஞ்சனாவை தொடர்பு கொண்டு, “தீனதயாளன் நேற்றில் இருந்து வீட்டுக்கு வரவில்லை” எனக் கூறியுள்ளார். இதனால் ஒருகட்டத்தில் சந்தேகமடைந்த சஞ்சனா, தீனதயாளனை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளார். ஆனால், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில், மாம்பாக்கம் பிரதான சாலைக்கு அருகில் உள்ள கோவிலாஞ்சேரி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு தீனதயாளனின் இருசக்கர வாகனம் இருப்பதைப் பார்த்துள்ளார்.  

 

இதையடுத்து, தீனதயாளன் அங்கே இருக்கலாம் என சுதாரித்துக்கொண்ட சஞ்சனா, அங்குள்ள கால்வாய் பகுதிக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது, காலி மனைக்கு உள்ளே இருந்த கால்வாய் தண்ணீரில் காணாமல் போன தீனதயாளன் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். ஒருகணம் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சஞ்சனா, அந்த இடத்திலேயே கண்ணீர்விட்டுக் கதறியுள்ளார். அதன்பிறகு, அந்த இடத்தில் ஏராளமான மக்கள் ஒன்று கூடினர்.

 

பின்னர், இச்சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலைய போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது தீனதயாளன் தலை, கழுத்து, முதுகு, தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் கத்தி குத்து காயங்களுடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து, தீனதயாளனின் உடலை மீட்ட போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

அதில், முதல் கட்ட விசாரணையில் திருநங்கை தீனதயாளனை மது அருந்த அழைத்துச் சென்ற சிலர் இந்தக் கொலையை செய்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதே வேளையில், கொலையாளிகள் பிடிபட்டால்தான் திருநங்கை தீனதயாளன் கொலைக்கான காரணம் தெரியவரும் எனப் போலீசார் தெரிவித்தனர். தற்போது, தாம்பரத்தில் திருநங்கை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் பிரதமரின் பேரன் மீது பாலியல் புகார்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
complaint against the grandson of the former prime minister

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமைய தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பக்கத்தில், “பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹாசன் மாவட்டத்தில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பது போன்ற ஆபாச வீடியோ காட்சிகள் பரவி வருகின்றன. இந்நிலையில், எஸ்ஐடி விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். எனவே இந்தக் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா மீண்டும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மதுரையில் இளைஞர்கள் அட்டூழியம்; வெளியான சிசிடிவி காட்சிகள்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
madurai incident Released CCTV footage

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை பகுதியில் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) சித்திரை திருவிழாவின் போது மது போதையில் இருந்த 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒத்தக்கடை பகுதிகளில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்களை தாக்குவது, பெண்கள் மீது தாக்குதல் நடத்துவது, அப்பகுதியில் இருந்த பொருட்களை அடித்து நொறுக்குவது, வீட்டிற்கு வெளியே உள்ள இருசக்கர வாகனங்களைத் தள்ளிவிட்டு உடைப்பது, கடைகளை சேதப்படுத்துவது எனத் தொடர்ந்து அராஜகங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இத்தகைய சூழலில் தான் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த கான் முகமது கான், கடந்த 22 ஆம் தேதி இரவு தனது பணியை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சுந்தரம் நகர் பகுதியில் வந்துள்ளார். அப்போது இந்த இளைஞர்கள் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்தத் தாக்குதலில் கான் முகமது கான் பலத்த காயம் அடைந்தார். அதன் பின்னர் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட்டு சிகிச்சை பெற்றார். இது குறித்து ஒத்தக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதற்கிடையே இந்த இளைஞர்கள் ஐயப்பன் நகர் பகுகுதியில் சென்று அங்குள்ள இரண்டு கடைகளை அடித்து நொறுக்கினர். மேலும் கடையில் இருந்த பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி மக்கள் மத்தியில் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இருவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.