Transferred to  armed forces after   complaints against the police inspector

சென்னையைச் சேர்ந்த ராஜா என்பவர் வேலூர் மாவட்ட காவல்துறையில் சத்துவாச்சாரி காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் ஆய்வாளர் ராஜா சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்கவரும் பொதுமக்களின் புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், புகார் கொடுக்க வருபவர்களையே தகாத வார்த்தைகளில் திட்டுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சத்துவாச்சாரி காவல் நிலையத்திற்கு உட்பட்டப் பகுதியில் அதிக குற்றச்செயல்கள் நடப்பதாகவும், அதே பகுதியில் பாலியல் தொழில் நடப்பது தெரிந்தும் ராஜா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் குற்றச்சாட்டுகள் உண்மை என்று தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ராஜாவை உயர் அதிகாரிகள் இரண்டு மூன்று முறை அழைத்து எச்சரிக்கை செய்துள்ளனர். ஆனாலும் காவல் ஆய்வாளர் ராஜா தனது போக்கை மாற்றிக் கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் காவல் ஆய்வாளர் ராஜாவை வேலூர் ஆயுதப்படைக்கு பணியிடை மாற்றம் செய்து உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது வேலூர் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.