Skip to main content

ரயில் மோதி மூன்று பேர் உயிரிழப்பு- வேப்பம்பட்டில் சோகம்

Published on 19/11/2023 | Edited on 19/11/2023

 

NN

 

திருவள்ளூர் அருகே மின்சார ரயில் மோதி மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மின்சார ரயிலானது வேப்பம்பட்டு ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது தண்டவாளத்தை கடக்க முயன்ற மூன்று பேர் தூக்கி வீசப்பட்டனர்.  இதில்  இரண்டு பெண்கள், ஒரு ஆண் என உட்பட மூன்று பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து திருவள்ளூர் இருப்புபாதை போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலங்களை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

உயிரிழந்த மூன்று பேரின் உடல்களும் அடையாளம் தெரியாத வகையில் சிதைவுற்று இருப்பதால் அவர்கள் யார் என்பது குறித்து விசாரணையானது நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வேப்பம்பட்டு பகுதியில் தொடர்ச்சியாக இதேபோல் தண்டவாளங்களை கடக்கும் போது விபத்து நடைபெறுவது தொடர்ந்து நிகழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேம்பால கட்டுமான பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது, எனவே மேம்பாலப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

கடந்த வாரம் கல்லூரி மாணவி ஒருவர் செவ்வாய்பேட்டை ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி உயிரிழந்தார். இப்படி தொடர்ச்சியாக நிகழும் விபத்துகளை தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்