‘இவ்வளவு பேரு வருவாங்கனு எதிர்பார்க்கல..’  காவல்துறையை திணறடித்த போராட்டக்காரர்கள்! 

Train block in nagapattinam for farmers bill

ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்களை அழைத்துச் செல்ல வாகன வசதி இல்லாததால் மூன்று கிலோமீட்டர் தூரம் அவர்களை நடக்க வைத்து அழைத்துச் சென்று மண்டபத்தில் வைத்தனர்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று முழு அடைப்பு மற்றும் மறியல் போராட்டங்கள் நடைபெற்றது.

அதன் ஒருபகுதியாக டெல்டா மாவட்டங்களிலும் பஸ் மற்றும் ரயில் மறியல் போராட்டங்கள் நடந்தது. நாகை மாவட்டம், கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடியில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி தலைமையில் திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கூட்டணிக்கட்சியைச் சேர்ந்த 1000க்கும் அதிகமானோர் வேளாண் சட்டங்களைத்திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு எதிராக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசுக்கு ஏதிராக முழக்கங்களை எழுப்பியபடியே எர்ணாகுளம் - காரைக்கால் விரைவு ரயிலை மறித்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் செல்ல வாகன வசதியில்லாமல் நடத்தி அழைத்துச்சென்றனர்.

"போராட்டத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வருவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை, அதனால் போதுமான வாகன வசதி ஏற்பாடு செய்யவில்லை" என்கிறார்கள் காவல்துறையினர்.

வாகனம் இல்லாததால் போராட்டம் நடந்த திருக்கண்ணங்குடியிலிருந்து கீழ் வேலூரில் உள்ள தனியார் மண்டபம் வரை சுமார் 3 கிலோமீட்டர் தூரம் போராட்டக்காரர்கள் முழக்கமிட்டபடியே நடந்த வந்தனர்.

farmers bill Nagapattinam
இதையும் படியுங்கள்
Subscribe