Skip to main content

விஷம் குடித்த விவசாயி; வேடிக்கை பார்த்த இன்ஸ்பெக்டர் - திண்டுக்கல் சோகம்

Published on 13/02/2023 | Edited on 14/02/2023

 

A tragic decision taken by a farmer in Dindigul; Police Inspector Post Transfer

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மையநாயக்கனூர் அருகே இருக்கும் குள்ளலகுண்டை சேர்ந்த விவசாயி பாண்டி. இவருக்கு கொடைரோடு சிறுமலை அடிவாரம் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அதே பகுதியில் உள்ள பள்ளப்பட்டியைச் சேர்ந்த சிலர் அபகரிக்க முயற்சி செய்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. 

 

இது குறித்து அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாண்டி புகார் கொடுத்தார். அந்த புகார் மீது இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடித்து வந்தார் எனச் சொல்லப்படுகிறது. இதனால் பாண்டி நிலக்கோட்டை நீதிமன்றத்தை நாடி வழக்குப்பதிவு செய்வதற்கான உத்தரவையும் வாங்கிக் கொடுத்தார். அப்படி இருந்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க ஆர்வம் காட்டவில்லை. 

 

அதனால் மனம் நொந்துபோன விவசாயி பாண்டி கடந்த 9 ஆம் தேதி அம்மையநாயக்கனூர் காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு காவல் நிலைய வாசற்படி முன் உட்கார்ந்து விஷம் குடித்தார். அதைக் கண்ட காவல்துறையினர் பாண்டியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாண்டி உயிரிழந்தார். இதனால் பாண்டியின் உறவினர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த விஷயம் எஸ்.பி. பாஸ்கரன் காதுக்கு எட்டவே உடனே பாண்டி கொடுத்த புகாரின் பேரில் நாச்சியப்பன், சங்கர், சின்ன கருப்பு ஆகிய 3 பேர் மீது  வழக்குப்பதிவு செய்ய அதிரடி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து மூவரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதோடு எஸ்.பி. உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. விசாரணையும் செய்து வந்தார்.

 

இந்த நிலையில், விவசாயி பாண்டி காவல் நிலையம் முன்பு விஷமருந்து குடித்துவிட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பொழுதும் கூட, மனிதாபிமான அடிப்படையில் அவரைக் காப்பாற்ற எந்த ஒரு ஆர்வமும் காட்டாமல் இன்ஸ்பெக்டர் போன் பேசிக் கொண்டிருந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தது. டிஐஜி மற்றும் எஸ்பி உள்பட போலீஸ் அதிகாரிகள் அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதோடு பாண்டியின் விஷயத்தில் இன்ஸ்பெக்டர் மெத்தனமாக செயல்பட்டது எதிர்த்தரப்புக்கு சாதகமாக அமைந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

 

அதைத் தொடர்ந்து, எஸ்பி பரிந்துரையின் பெயரில் முதல் கட்ட நடவடிக்கையாக இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமியை நேற்று காலையில் ஆயுதப்படைக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்தனர். அதைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட விசாரணை அடிப்படையில், நேற்று மாலையிலேயே இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். இப்படி ஒரே நாளில் எஸ்பி மற்றும் ஏசி அதிரடி நடவடிக்கை எடுத்திருப்பதை கண்டு மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் அரண்டு போய் இருக்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.