Tragedy while demolishing the Panchayat Council office building

ஈரோடு மாவட்டம் தாளவாடி ஒன்றியத்துக்கு உட்பட்டது கேர்மாளம் ஊராட்சி . இந்த ஊராட்சி அலுவலகம் கட்டிடம் மிகவும் பழுதடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் இருந்தது. இந்த பழுதடைந்த கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. புதிய கட்டிடம் கட்ட ஒப்பந்ததாரர் பழுதடைந்த அலுவலக கட்டிடத்தை ஆட்கள் மூலம் இடித்துக் கொண்டிருந்தார்.

அப்பொழுது கூலி தொழிலாளி கடம்பூர் மாக்கம்பாளையத்தைச் சேர்ந்த சிக்குமாதன்(45) என்பவர் கட்டிடத்தின் உள்ளே சென்று ஏணி எடுத்துவரச் சென்றுள்ளார். அப்போது கட்டிடத்தின் சுவர் கூலித்தொழிலாளியின் தலையில் இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்தவரை கேர்மாளம் அரசு துணை சுகாதார நிலையத்தில் முதல் சிகிச்சை பெற்று மேல்சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு சென்று பரிசோதனை செய்த மருத்துவர் கூலித்தொழிலாளி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.