Skip to main content

விபரீத காதல்... மாமியாரை கொன்ற மருமகன்..!

Published on 19/07/2021 | Edited on 19/07/2021

 

Tragedy over mother-daughter marriage

 

நெல்லை மாவட்டத்தின் மூலைக்கரைப்பட்டியில் தாய் மகள் இருவரும் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்டதன் காரணமாக ஏற்பட்ட விளைவுகள் அந்தப் பகுதியில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளன.

 

மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்தவர் வேலாயுதம். இவரது மனைவி ராஜலட்சுமி இவர் நெல்லை அரசு மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வந்திருக்கிறார். இவர்களின் மகள் அனிதா(23) இவருக்கும் இவரது உறவினரான அபிமன்யுவிற்கும்(33) சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தேறியிருக்கிறது. இத்தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் தனியாக மூலைக்கரைப்பட்டியை அடுத்த கல்லத்தி கிராமத்தில் குடியிருந்து வந்தனர். 

 

திருமணத்திற்கு முன்னர் அனிதாவிற்கும் மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. எனினும் அதை மறைத்த பெற்றோர்கள் அனிதாவை தங்களது உறவினரான அபிமன்யுவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமான பிறகும் அனிதாவிற்கு அந்த நபருடன் தொடர்பு தொடர்ந்து வந்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த கணவர் அபிமன்யு, மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனாலும் அது பற்றிப் பொருட்படுத்தாத அனிதா, தன் குழந்தைகளை விட்டுவிட்டு தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

 

இதே போன்று அனிதாவின் தாயான நர்ஸ் ராஜலட்சுமிக்கும் வேறொரு நபருடன் திருமணத்தை மீறிய தொடர்பு இருந்து வந்திருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் கணவர் வேலாயுதம் தன் மனைவியின் போக்கைக் கண்டித்திருக்கிறார். ஆனாலும் நர்ஸ் ராஜலட்சுமி, தன்னுடைய போக்கை மாற்றிக்கொள்ளவேயில்லை.

 

Tragedy over mother-daughter marriage

 

இந்த நிலையில், கடந்த வாரம் தன் மனைவியை மீண்டும் குடும்பம் நடத்துவதற்கு அழைப்பதற்காக மூலைக்கரைப்பட்டி சென்ற அபிமன்யு, அவரை தன் வீட்டிற்கு அழைத்துள்ளார். ஆனால், அனிதா வர மறுத்திருக்கிறார். இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ராஜலட்சுமி தனது மருமகனைத் தாக்கியிருக்கிறார். இது தொடர்பாக அபிமன்யு கடந்த 15ம் தேதியன்று நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தன் மனைவி தன்னுடன் குடும்பம் நடத்த வர மறுப்பதாகவும், மாமியார் தன்னை தாக்கியதாகவும் அவரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் புகார் அளித்திருக்கிறார்.

 

இந்தச் சூழலில், நேற்றிரவு மூலைக்கரைப்பட்டிக்கு மீண்டும் சென்ற அபிமன்யு, தன் மனைவியை வீட்டிற்கு வரும்படி கூப்பிட்டபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் ராஜலட்சுமி, தன் மருமகனைக் கண்டபடி திட்டியிருக்கிறார். இதனால் ஆத்திரமான அபிமன்யு, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராஜலட்சுமியை வெட்டியிருக்கிறார். அது சமயம் பக்கத்துவீட்டைச் சேர்ந்த அன்பழகன் என்பவர் தடுக்க முற்பட்டபோது அவருக்கும் வெட்டு விழுந்திருக்கிறது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ராஜலட்சுமி ரத்தம் பீறிடச் சம்பவ இடத்திலேயே மரணமடைந்திருக்கிறார்.

 

தகவலறிந்த நாங்குநேரி இன்ஸ்பெக்டர் காளியப்பன், மூலைக்கரைப்பட்டி எஸ்.ஐ. ஆழ்வார் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து ராஜலட்சுமி உடலைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். தவிர காயமடைந்த அன்பழகனுக்கு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தபிறகு அவரை மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இது குறித்து வழக்குப் பதிவு செய்த மூலைக்கரைப்பட்டி போலீஸார், அபிமன்யுவை கைது செய்தனர். மேலும் ராஜலட்சுமியின் கணவரான வேலாயுதமும் போலீஸாரின் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் அவருக்கும் தொடர்பு இருக்குமா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்பு வேலாயுதத்திற்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவர, அவரும் அவரது மருமகன் அபிமன்யுவும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிறார் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் காளியப்பன்.

 


 

சார்ந்த செய்திகள்