Skip to main content

சென்னையில் மருத்துவர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

Tragedy befell a doctor in Chennai; Trapped letter

 

சென்னை ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையைச் சேர்ந்தவர் கார்த்தி(42). இருதய அறுவை சிகிச்சை நிபுணரான இவர், சென்னை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். இவர், ஆழ்வார்பேட்டை டி.டி.கே சாலையில் உள்ள தனது தாய் மாமாவின் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். இவருடைய தந்தை உலகநாதன், மருத்துவராகப் புதுச்சேரியில் வசித்து வருகிறார். கார்த்தியின் தாய் கஸ்தூரிக்கு முதுமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கார்த்தியின் தங்கை தீபா, அமெரிக்காவில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். மேலும், அவர் தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவிலேயே வசித்து வருகிறார்.

 

இந்த நிலையில், கார்த்தி அமெரிக்காவில் உள்ள தனது தங்கை தீபாவுடன் தினமும் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கமாக வைத்துள்ளார். அதன் அடிப்படையில், கடந்த 19 ஆம் தேதி தீபா கார்த்திக்கை செல்போனில் அழைத்துள்ளார். ஆனால், அவர் அழைப்பை எடுக்கவில்லை. தொடர்ந்து இரண்டு நாள்களாக தன்னுடைய அண்ணன் கார்த்திக்கை அழைத்தும், அவர் அந்த அழைப்பை எடுக்கவில்லை. 

 

இதனால் சந்தேகம் அடைந்த தீபா, தன்னுடைய நண்பரான ஸ்ரீவித்யா என்பவரை தொடர்பு கொண்டுள்ளார். மேலும், அவரிடம் இது குறித்து தகவல் தெரிவித்து வீட்டுக்கு நேரில் சென்று பார்க்கும்படி கூறியுள்ளார். இதையடுத்து ஸ்ரீவித்யா, கார்த்தியின் வீட்டுக்குச் சென்று பார்த்தபோது வீடு திறந்த நிலையில் இருந்துள்ளது. மேலும், அவர் கதவைத் திறந்து வீட்டுக்கு உள்ளே சென்றபோது அதிகமாக துர்நாற்றம் வீசியிருக்கிறது.

 

இதனால் சந்தேகம் அடைந்த ஸ்ரீவித்யா, வீட்டின் அறைக்குச் சென்று பார்த்துள்ளார். அங்கு, கார்த்தி நாற்காலியில் உட்கார்ந்த நிலையிலேயே கைகளில் ரத்தம் வெளியேறியவாறு பிணமாகக் கிடந்துள்ளார். மேலும், கார்த்தியின் உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த ஸ்ரீவித்யா தேனாம்பேட்டை காவல்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார். ஸ்ரீவித்யா கொடுத்த தகவலின் பேரில், உதவி ஆணையர் பிரகாஷ்ராஜ், காவல் ஆய்வாளர் ஆனந்த் பாபு, உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

 

அங்கு சென்ற காவல்துறையினர்,  கார்த்தி தனது இரண்டு கைகளிலும் டிரிப்ஸ் ஏற்றும் ஊசியால் குத்தப்பட்டு, உடலில் இருந்து ரத்தம் வெளியேறி அறை முழுக்கச் சிதறி இருந்துள்ளதைப் பார்த்துள்ளனர். அதன் பின்னர் உயிரிழந்த கார்த்தியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் கார்த்தியின் வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது, கார்த்தி இறப்பதற்கு முன்பு தன் கைப்பட எழுதி அறையில் வைத்திருந்த ஒரு கடிதத்தைக் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், “எனது வாழ்க்கை அழகாக முடிவுக்கு வந்தது. எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை” என்று எழுதப்பட்டிருந்திருக்கிறது.

 

இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் நடத்திய விசாரணையில், கார்த்தி பொதுமக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையால் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்துள்ளார். மேலும், கொரோனா பேரிடர் காலத்தில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, அவருக்கு 3 முறை கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உதவிப் பேராசிரியராக ராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் பணியில் சேர்ந்துள்ளார். இதனையடுத்து, சில மாதங்களாக இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்று  காவல்துறையினருக்குத் தெரியவந்தது. இதனையடுத்து, கார்த்தியின் இறப்பு குறித்து பல்வேறு கோணங்களில் தேனாம்பேட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  மருத்துவ பேராசிரியர் ஒருவர் வீட்டில் பிணமாகக் கிடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

திக் திக் நொடிகள்... சென்னையை கலங்கடித்த சம்பவம்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Tick-tick seconds... a child saved by tact

சென்னை ஆவடியில் நான்காவது மாடியில் இருந்து கீழே தவறிவிழ முற்பட்ட நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சென்னை ஆவடி பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன்-ரம்யா தம்பதிக்கு 7 மாத குழந்தை உள்ளது. இன்று காலை குழந்தையின் தாய் ரம்யா குழந்தைக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்பொழுது கை தவறி குழந்தை நான்காவது மாடியில் இருந்து இரண்டாவது தளத்தில் உள்ள வெளிப்புற கூரை மீது விழுந்தது. அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் குழந்தை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டனர். கீழே பெட்ஷீட் போன்றவை விரிக்கப்பட்டு குழந்தை விழுந்தால் பிடிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து திக் திக் நொடிகளை கடந்து அந்த பகுதியை சேர்ந்த ஹரி என்ற இளைஞர் ஒருவர் சாதுர்யமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்டார். காப்பாற்றப்பட்ட குழந்தையானது உடனடியாக ஆவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.