![Tragedy of 11-year-old girl; Police serious investigation](http://image.nakkheeran.in/cdn/farfuture/oZ2ZqsdBUh3cRgHW0Eq9VxOen2Vpkl_NtkG2Y1sR_vg/1711127495/sites/default/files/inline-images/our-ins-art_21.jpg)
மதுரை மாவட்டம் கூடல் புதூர் என்ற பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் தான் வசித்து வந்த வீட்டின் கழிவறையில் மயங்கிய நிலையில் உறவினர்களால் மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று (21.03.2024) அனுமதிக்கப்பட்டார். அப்போது சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர். அதனைத் தொடந்து சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்தை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே சிறுமியின் வீட்டிற்கு வந்த தடயவியல் ஆய்வாளர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதே சமயம் சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அதற்கான முடிவு வெளியானது. அதில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்துள்ளது உறுதியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிறுமியின் மரணம் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்போது போக்சோ மற்றும் கொலை வழக்காக மாற்றி விசாரணையை மதுரை மாநகர போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். மதுரையில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.