Skip to main content

ட்ராஃபிக் சிக்னலால் ஏற்பட்ட நெரிசல்! - எரிச்சலில் வாகன ஓட்டிகள்!

Published on 19/02/2021 | Edited on 19/02/2021

 

traffic jam caused by traffic signal

 

ஈரோடு மாநகரில், அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதி மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்ததாக உள்ளது. இந்த ரவுண்டானாவில் ப்ரப் ரோட்டில் இருந்துவரும் வாகனங்கள், கே.வி.என் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், ஈரோடு பஸ் நிலையத்திலிருந்தும், சவிதா வழியாகவும், பெருந்துறை ரோடு வழியாக கோவை திருப்பூர் பெருந்துறை செல்லும் வாகனங்கள், நசியனூர் செல்லும் வாகனங்கள் என ஐந்து பாதையிலும் ஒரே நேரத்தில் வாகனங்கள் செல்வதால், இந்தப் பகுதியில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுதியாகவே காணப்படும். இதனால், இந்தப் பகுதியை வாகன ஓட்டிகள் கடந்து செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

 

இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் காணப்படும். மேலும், இங்கு போக்குவரத்து சிக்னல் இல்லாததால் வாகனங்கள் தாறுமாறாகச் சென்று வந்தது. இதனால் சில நேரங்களில் விபத்தும் நடந்துள்ளது. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் டிராஃபிக் சிக்னல் செயல்படத் தொடங்கியது. இதனால் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது முன்பை விட கூடுதலாக போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியது. அதாவது கே.வி.என் ரோடு, பெருந்துறை ரோடு, ப்ரப் ரோடு போன்ற பாதையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. வாகன ஓட்டிகளிடம் இதற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியதால் அந்த டிராஃபிக் சிக்னலை செயல்படாமல் வைத்திருந்தனர் போக்குவரத்து போலீசார்.

 

இந்த நிலையில், 19 ந் தேதி முதல் மீண்டும் ஈரோடு மருத்துவமனை ரவுண்டானா பகுதியில் டிராஃபிக் சிக்னலை செயல்பட வைத்தார்கள் போலீசார். இதனால், மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கே.வி.என் ரோட்டில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இங்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை உள்ளதால் ஆம்புலன்ஸ் வாகனங்கள் சென்று வருவதிலும் அதிக சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதேபோல் ப்ரப் ரோடு, பெருந்துறை ரோடு பகுதிகளிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றது. இதனால், பொறுமை இழந்த சில வாகன ஓட்டிகள் அங்கு போக்குவரத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் கடும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.

 

இதனால், சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்தப் பகுதியில் சிக்னல் வேண்டாம். சிக்னல் இல்லாமல் இருந்தால்தான் எந்தச் சிக்கலும் இல்லாமல் சென்றுவர முடியும் என்று வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். வேறு வழியில்லாமல் 19 ந் தேதி மதியத்திற்குப் பிறகு போலீஸாரே டிராஃபிக் சிக்னலை அகற்றிவிட்டு மீண்டும் பழையமுறையில் வாகனங்கள் செல்ல அனுமதித்தனர்.  இதன் பிறகு தான் அந்தப் பகுதியில் போக்குவரத்துச் சீரானது. சில இடங்களில் ட்ராஃபிக் சிக்னல் போக்குவரத்தைச் சீராக்கும், சில இடங்களில் ட்ராஃபிக் சிக்னல் வைத்தால் போக்குவரத்தை நெரிசலாக்கும் அப்படித்தான் இங்கும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

நீலகிரியைத் தொடர்ந்து ஈரோடு; தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.

இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோடு மக்களவைத் தொகுதியின் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர்.டி.டி. அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையின் சிசிடிவி கேமரா நேற்று (28.04.2024) இரவு 11.30 மணியளவில் பழுதாகியுள்ளன. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன. ஈரோடு மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் பிரகாஷும், அதிமுக சார்பில் ஆற்றல் அசோக் குமாரும், பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விஜயகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பாக கார்மேகனும் போட்டியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த இரு சம்பவங்களும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் வாக்கு இயந்திரங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனத் திமுக சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை நேரில் சந்தித்த திமுக எம்.பி, என்.ஆர்.இளங்கோ இதற்கான மனுவை அளித்துள்ளார். அதில் 'வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி முறையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்கு இயந்திரங்கள் உள்ள அறையை சுற்றி 500 மீட்டர் சுற்றளவில் ட்ரோன் பறக்க தடை விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.