Skip to main content

போக்குவரத்து நெரிசல்... பல மணி நேரம் காத்திருக்கும் வாகன ஓட்டிகள்!

Published on 27/01/2021 | Edited on 27/01/2021

 

Traffic congestion ... Motorists waiting for hours ..!


திருவண்ணாமலை நகரத்திற்கு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வருகின்றனர். அதேபோல் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு திருவண்ணாமலை வழியாக தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் செல்கிறார்கள். அவர்கள், அண்ணாமலையார் கோயிலுக்கும் சென்று தரிசனம் செய்கிறார்கள். மேல்மருவத்தூர் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் பேருந்துகள் கோயில் அருகில் வராமல் நகரத்தின் சில இடங்களுக்குத் திருப்பிவிட்டு காலி மைதானங்களில் நிறுத்திவைக்கப்படுகிறது. கார்களை மட்டும் கோயில் பிரகாரத்தைச் சுற்றி நிறுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், கடந்த 20 நாட்களாக திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது. வெளியூரிலிருந்து வரும் வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் கோயிலைச் சுற்றியுள்ள மாடவீதிகளிலும், குடியிருப்புச் சாலைகளின் ஓரமாகவும் நிறுத்திவிடுகின்றனர். இதனால் வழக்கமாகச் செல்லும் வாகனங்கள்கூட இந்தச் சாலைகளில் செல்ல முடியாமல் பெரும் போக்குவரத்து நெருக்கடியில் சிக்குகின்றன.


தற்போது தை மாத வளர்பிறை முகூர்த்த தினம் என்பதால், அதிகமான அளவில் நகரில் உள்ள மண்டபங்களில் திருமணங்கள் நடைபெறுகின்றன. திருமணத்துக்கு வருபர்களின் நான்கு சக்கர வாகனங்களும் நகருக்குள் அதிகமாக வருகின்றன. 90 சதவீத மண்டபங்களில் பார்க்கிங் வசதியில்லாததால் சாலைகளிலேயே அந்த வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் நகரத்தின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்கு 15 நிமிடத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்கு ஒருமணி நேரத்துக்கும் மேலாகிவிடுகின்றன. உள்ளூர் நபர்கள் சின்னச் சின்ன சாலைகள் வழியாகச் செல்ல முடிவெடுத்தாலும் அங்கும் வெளியூர் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.


திருவண்ணாமலை நகரப் போக்குவரத்துக் காவலர்கள் கூறுகையில், "திருவண்ணாமலை நகரத்துக்கு வருவதற்கு 9 முக்கியச் சாலைகள் உள்ளன. இதில், திருவண்ணாமலை டூ சென்னை சாலையில் தாலுக்கா அலுவலகம் அருகே ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடக்கிறது. இதனால், அந்தச் சாலை வழியாக விழுப்புரம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, செங்கம், சாத்தனூர் அணை பகுதிகளுக்குச் சென்றுகொண்டிருந்த பேருந்துகள் நகரத்தின் பிரதான வீதிகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளது. நகருக்குள் பேருந்துகள் செல்ல வேண்டிய சூழ்நிலையால் நகரத்துக்குள் ஒருவழிப்பாதையை இருவழிப்பாதையாகப் பயன்படுத்த அனுமதித்துள்ளோம். இதுபோன்ற காரணங்களால் நகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது" என்கிறார்கள்.


சமூக ஆர்வலர்களோ, "பேருந்து நிலையத்தை நகரத்துக்கு வெளியே இடமாற்றம் செய்ய வேண்டும். அதைச் செய்தால் பாதி போக்குவரத்து நெரிசல் குறையும். மேலும், பல நிறுவனங்கள் அடுக்குமாடி வியாபார நிறுவனங்களைப் புதியதாகக் கட்டுகிறது. அப்படிக் கட்டும் நிறுவனங்கள் பார்க்கிங் வசதி செய்வதேயில்லை. இதனால், அங்கு வரும் பொதுமக்கள் சாலைகளின் ஓரம் வாகனங்களை நிறுத்துகிறார்கள். இதனாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது உடனடி தேவை நகருக்குள் முக்கியச் சாலைகளை மறித்து மேடை அமைத்து கூட்டங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது. அப்படி அனுமதிப்பதாலே போக்குவரத்து நெரிசல்கள் அதிகமாகின்றன. தற்போது நகரம் இருக்கும் சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் மட்டுமல்ல எந்த அமைப்பின் கூட்டங்களையும் நகருக்குள் நடத்த, காவல்துறை அனுமதிக்கக்கூடாது. அதனை முதலில் செய்தாலே தற்போதைக்குப் போக்குவரத்து நெரிசலை ஓரளவு தவிர்க்க முடியும், பொதுமக்களும் நிம்மதியாக இருப்பார்கள்" என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சித்ரா பௌர்ணமி; அரசு போக்குவரத்துக் கழகம் முக்கியத் தகவல்! 

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Chitira Poornami Govt Transport Corporation Important Information

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “23.04.2024 (செவ்வாய் கிழமை) சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து 22/04/2024 அன்று 527 பேருந்துகளும் மற்றும் 23/04/2024 அன்று 628 பேருந்துகளும்  இயக்கப்பட உள்ளன.

மேலும் சென்னை மாதவரத்திலிருந்து 22/04/2024 அன்று 30 பேருந்துகளும் 23/04/2024 அன்று 30 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும். அதே போன்று தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 அன்று 910 பேருந்துகளும் 23/04/2024 அன்று 910 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும்.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 22/04/2024 மற்றும் 23/04/2024 ஆகிய நாட்களில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'பெயரே சொல்லி அழைக்க தானே'- அமைச்சரின் பதிலால் தலைகுனிந்த அலுவலர்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 'Just call me by name' - the minister the minister's reply

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது. மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

முன்னதாக திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சே.கூடலூர் கிராமத்தில் அமைந்துள்ள வாக்குச்சாவடியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். அப்போது அவரது பெயரை வாக்குச்சாவடியில் அமர்ந்திருந்த அலுவலர் ஜெயராணி, ஓட்டு போடுபவர் யார் என்பதை அங்குள்ள பூத் ஏஜன்ட்கள் தெரிந்துக்கொண்டு தங்களிடம் உள்ள பட்டியலில் குறித்துக் கொள்வதற்காக பெயரை குறிப்பிடுவார். அதன்படி வாக்களிக்க வந்த அமைச்சர் வேலுவின் பெயரை சத்தமாக கூறினார். உள்ளே அமர்ந்திருந்த வாக்குசாவடி முகவர்கள் அனைவரும் குறித்துக் கொண்டனர். அமைச்சர் வேலுவும் ஸ்லீப்பில் கையெழுத்து போட்டுவிட்டு, விரலில் மை வைத்துக் கொண்டு நேரடியாக சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.

அப்போது அங்கிருந்த மற்றொரு அலுவலர், அந்த பெண் அதிகாரியிடம் அமைச்சரை பெயர் சொல்லி அழைத்ததை அவர் தவறாக எடுத்துக்கொள்வார், அவரிடம் சாரி கேளுங்க என திரும்ப திரும்ப வலியுறுத்தினார். பயந்துபோன அந்த பெண் அலுவலரும் ஓட்டு போட்டுவிட்டு வந்த அமைச்சரிடம் சென்று,  சாரி சார் என்றார். அமைச்சர் எதுவும் புரியாமல், ஏன் என கேட்டபோது, உங்கள் பெயரைச் சொல்லி குறிப்பிட்டதும், நீங்கள் தேர்தல் அலுவலர் உங்களது பணியை நீங்கள் செய்கிறீர்கள், பெயர் என்பது அழைப்பதற்காக தானே இதில் என்ன இருக்கிறது? இதற்கு எதற்கு நீங்கள் சாரி கேட்கிறீர்கள் அதெல்லாம் தேவையில்லையம்மா என கூறிவிட்டு சென்றார்.

சாரி கேட்கச் சொன்ன அந்த வருவாய்த்துறை அலுவலர் தலை குனிந்தபடி அங்கிருந்து நகர்ந்துவிட்டார். அந்த பெண் அலுவலர் பெருமிதமாக அமர்ந்து பணியை செய்யத் தொடங்கினார். 

 

படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்.