'Traffic change for one year' - Chennai Traffic Police information

சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் புளியந்தோப்பில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “சென்னை மாநகராட்சியும், ரயில்வே துறையும் இணைந்து புளியந்தோப்பு டாக்டர். அம்பேத்கர் கல்லூரி சாலையில் மேம்பாலம் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இப்பணிக்காக போக்குவரத்து மாற்றங்கள் முன்மொழியப்பட்டு நாளை மறுநாள் (02.01.2024) முதல் ஓராண்டுக்கு செயல்படுத்தப்படும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி பெரம்பூர் மற்றும் வியாசர்பாடியில் இருந்து டாக்டர். அம்பேத்கர் கல்லூரி சாலை, கணேசபுரம் இரயில்வே சுரங்கப்பாதை வழியாக புரசைவாக்கம் வரும் வாகனங்கள் ஒருவழிப் பாதையாக செயல்படுத்தப்படும்.

புரசைவாக்கம், டவுட்டனில் இருந்து பெரம்பூர், வியாசர்பாடி, மாதவரம் வழியாக டாக்டர்.அம்பேத்கர் கல்லூரி சாலையில் கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக வரும் வாகனங்கள் டாக்டர்.அம்பேத்கர் கல்லூரி சாலை, ஸ்டீபன்சன் சாலை, பெரம்பூர் ஹைரோடு தெற்கு, முரசொலி மாறன் மேம்பாலம், பெரம்பூர் ரயில் நிலையம் சந்திப்பு வழியாக சென்று அவர்களின் இலக்கை அடையலாம். எனவே வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.