Skip to main content

பெண் குழந்தைகளின் கும்மி, இளைஞர்களின் போர்காய் விளையாட்டுடன் நடக்கும் கலாச்சார பொங்கல் விழா...

Published on 15/01/2020 | Edited on 15/01/2020

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கலுக்கு மறுநாள் வித்தியாசமான திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

 

traditional pongal celebration in puthukottai

 

 

செரியலூர் கிராமத்தில் பிறந்த பெண் குழந்தைகள் பருவமெய்துவதற்கு முன்பு இந்த திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும். பிறந்த சிறு குழந்தைகள் இருக்கும் வீட்டில் குழந்தைகளின் தாய் அல்லது சகோதரிகள் கலந்து கொள்வார்கள். திருவிழாவில் பங்கேற்கும், குழந்தைகள், பெண்கள் திருவிழா முடியும் வரை விரதம் இருந்து கலந்து கொள்ள வேண்டும்.  

செரியலூர் கிராமத்தில் பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் காலையில் வெற்றுப் பொங்கல் வைத்து 3 படையல் வைத்து ஒரு படையலை விரதம் இருப்பவர்கள் சாப்பிடவும் மற்ற இரு படையல்களை ஒரு ஓலை கூடையில் இரு பெரிய சாணிப் பிள்ளையார்களுடன் 92 சிறு சாணப் பிள்ளையார் செய்து அதில் கூழைப் பூ, ஆவாரம் பூ, அருகம்புல், வேப்பிலை, கரும்பு, வெல்லம் ஆகியவற்றை வைத்து கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள பாலை மரத்தடியில் கிராமத்தின் அனைவரும் ஒன்று கூடி பெண்கள், பெண் குழந்தைகள் தனித்தனியாக கும்மியடித்து வழிபாடு செய்து அணிவகுத்து தீர்த்தான் ஊரணி வரை கொண்டு செல்வர். அங்கு கூடையில் உள்ள பொங்கலை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டு மற்ற பொருட்களை குழியில் புதைத்துவிட்டு ஒரு சிறு பிள்ளையாரை அருகில் உள்ள ராக்காச்சி அம்மன் கோயில் காட்டில் வைத்து வழிபடுவர். இந்த திருவிழாவை கொப்பித் திருவிழா என்று இப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.

இன்று நடைபெற்ற இந்த திருவிழாவில் ஏராளமான பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். மேலும் திருவிழாவைக் காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். இது குறித்து அந்த பகுதி பெண்கள் மற்றும் கிராம மக்கள் கூறும் போது, காத்தான் - தீர்த்தான் என இரு சகோதரர்கள் முந்தைய காலத்தில் வாழ்ந்துள்ளனர். அதில் காத்தான் மகள் கொப்பி அம்மாள் சிறு குழந்தையாக இருக்கும் போது தனது பெரியப்பா தீர்த்தான் வீட்டுக்கு காட்டுப் பகுதியில் சென்ற காணாமல் போய்விட்டார். பல நாட்களுக்கு பிறகு ஊரின் மையப்பகுதியில் உள்ள பாலை மரத்தின் மேல் இருந்து அம்மை நோய் தாக்கி இறந்து கீழே விழுந்ததை பார்த்து கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது. அதன் பிறகு இந்த கொடிய நோயான அம்மைநோய் வந்து யாரும் இறக்க கூடாது என்பதற்காக அம்மைக்கு பலியான கொப்பியம்மாளை நினைத்து சிறு பெண் குழந்தைகள் 
 
அம்மைக்கு எதிரான நோய் தடுப்பு மூலிகைகளுடன் ஊர்வலமாக சென்று தீர்த்தான் ஊரணியில் சிறப்பு வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது. இது பன்நெடுங்காலமாக உள்ளது. அதனால் காலங்கள் மாறினாலும் கலாச்சாரத்தை மாற்ற விரும்பாமல் கிராமத்தினர் இந்த வழிபாட்டை செய்து வருகிறோம். வெளியூர், வெளிநாடுகளில் வசிப்பவர்களும் இந்த நாளில் சொந்த ஊருக்கு வந்துவிடுவார்கள் என்றனர்.    

பழமையான பாலை மரத்தடியில் பெண்களும், பெண் குழந்தைகளும் கூடி கும்மிடியப்பதுடன் பாலை மரத்தை தெய்வமாக வணங்கி படையலிட்டு அதன் பிறகே ஊர்வலமாக செல்கிறார்கள். 

இளைஞர்களின் போர்க்காய் விளையாட்டு :  

  தமிழகத்தில் பொங்கல் விழாவை கொண்டாட ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது போல செரியலூரில் தேங்காயோடு தேங்காய் மோதி உடைக்கும் போட்டி நடத்தப்படுகிறது. பல சுற்றுகளில் போட்டியிட்டு கடைசி தேங்காயை உடைத்து வெற்றி பெற்ற தேங்காய்க்கு பரிசும், சிறப்பு பரிசும் வழங்கப்படுகிறது.  

தை திருநாளை தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையாக 3 நாட்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த நாட்களில் கிராமங்களில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த வகையில் தமிழகம் எங்கும் மாடுகளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு, சேவல் சண்டை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது போல தமிழகத்தின் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதாவது வித்தியாசமான போட்டிகளை நடத்தி வருகின்றனர்.  

இந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர், வேம்பங்குடி, மேற்பனைக்காடு, திருவாப்பாடி, மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பைங்கால், சாணாகரை, பேராவூரணி, தென்னங்குடி, வலப்பிரமன்காடு, செருவாவிடுதி, களத்தூர் மற்றும் பல கிராமங்களில் தேங்காய்களால் மோதிக் கொள்ளும் வித்தியாசமான போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதாவது எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வதும். இந்த மோதலில் உடையும் தேங்காயை மோதி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்த மோதலுக்கான ஒரு போர் தேங்காய் ரூ.300 முதல் ரூ. 500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். ஒரே தேங்காயை கொண்டு பல தேங்காய்களை உடைத்து கொண்டு செல்பவர்களும் உள்ளனர்.  இதுவரை அனைத்து ஊர்களிலும் யார் வேண்டுமானாலும் விரும்பியவர்களின் தேங்காய்களுடன் மோதிக் கொண்டு உடையும் தேங்காயை எடுத்துச் செல்லும் விளையாட்டு நடந்தது.  

ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக செரியலூர் கிராமத்தில் உள்ள இளைஞர்களால் களம் அமைத்து போர் தேங்காய் உடைக்கும் போட்டியும் வெற்றி பெறும் தேங்காய்க்கு ரூ. ஆயிரம் பரிசும் அறிவித்திருந்தனர். அதே போல இந்த ஆண்டு வியாழக்கிழமை நடக்கும் போய்காய் உடைக்கும் போட்டிக்கு.. முதல் பரிசு பெறும் தேங்காய்க்கு ரூ. 2001, இரண்டாம் பரிசு ரூ. 1001, மூன்றாம் பரிசு ரூ 501 மற்றும் ஆறுதல் பரிசகளும் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படி வித்தியாசமான விழாக்களும், போட்டிகளும் செரியலூரில் நடப்பதால் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து ரசிக்கின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள். 

Next Story

ஒரு ரோட்டுக்கு 2 டெண்டர்கள்! அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் மக்கள் வரிப்பணம்!

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு ரோடு போட ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அமைச்சர் பூமி பூஜை போட்ட பிறகு அதே ரோட்டில் ரூ.5 லட்சத்திற்கு சிமென்ட் சாலைப் பணிக்கு நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியுள்ள அவலம் நடந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் இருந்து கீரமங்கலம், செரியலூர் இனாம், செரியலூர் ஜெமின், வேம்பங்குடி மேற்கு ஊராட்சி வரை சென்று கீரமங்கலம் - பேராவூரணி சாலையில் இணையும் சுமார் 3 கி.மீ இணைப்பு கிராமச் சாலை உள்ளது. இந்தச் சாலையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மேம்பாட்டுச் சாலை (ஆர்.ஆர்) திட்டத்தில் இணைத்து நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.1 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வந்து சாலைப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடத்தினர். மழைக்காலம் என்பதால் சாலைப் பணி தாமதம் செய்யப்பட்டிருந்தது. இன்னும் சில நாட்களில் பணிகள் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தான் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் பேராவூரணி சாலையில் (ஆர்.ஆர்.க்கு ஒப்படைக்கப்பட்ட சாலை) இருந்து சுமார் 200 மீட்டர் நீலத்திற்கு சிமெண்ட் சாலை அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சாலையில் தான் ஆர்.ஆர். சாலையும் வரப்போகிறது. அதாவது தற்போது அவசர கதியில் போடப்படும் சிமெண்ட் சாலையில் இன்னும் சில நாளில் ஆர்.ஆர். சாலைப் பணிக்காக உடைத்துவிட்டு தார்ச்சாலை போடப் போகிறார்கள். இதனால் மக்கள் வரிப்பணம் ரூ.5 லட்சம் வீணாகப் போகிறது.

2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு சாலை நெடுஞ்சாலைக்கு ஒப்படைத்து அந்த சாலை பணிக்காக ஒப்பந்தம் விடப்பட்ட பிறகு ஊராட்சி ஒன்றியம் எப்படி சிமெண்ட் சாலைக்கு நிதி ஒதுக்கி டெண்டர் விட்டது? இப்போது போடப்படும் சிமென்ட் சாலையை தார்ச்சாலை போட வருபவர்கள் உடைத்துவிடுவார்களே என்று அறந்தாங்கி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டால், வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் யூனியனில் இருந்து எந்த வேலையும் நடக்கலயே என்று சொன்ன ஒன்றிய அதிகாரிகள் சிறிது நேரத்திற்கு பிறகு அது அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணியாம் என்றனர். எந்தப் பணியானாலும் அதே சாலைக்கு மற்றொரு டெண்டர் விடப்பட்ட பிறகு அதில் சிமெண்ட் ரோடு வேலை செய்தால் அந்தப் பணம் வீணாகாதா? என்ற நமது கேள்விக்கு ஒன்றிய அதிகாரிகளிடம் இருந்து பதில் இல்லை.

தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஆர் திட்டப் பொறியாளர் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, எங்களிடம் ஒப்படைத்த சாலையில் வேறு யாரும் பணி செய்யக் கூடாது. ஒன்றிய நிதியில் வேலை நடப்பது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட திட்ட அலுவலர் கவனத்திற்கு கடிதம் அனுப்பிவிட்டோம். இனிமேல் அவர்கள் வேலை செய்யமாட்டார்கள். எங்கள் டெண்டர் படி முழுமையாகத் தான் தார்ச்சாலை போடுவோம் என்றார். ஆனால் இன்று வரை தற்காலிக சிமென்ட் சாலைக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, ரொம்ப வருசமா குண்டும் குழியுமா கிடந்த ரோட்டுக்கு இப்ப ஆர்.ஆர்.ல நிதி ஒதுக்கின பிறகு பஞ்சாயத்தில் இருந்து சிமென்ட் ரோடு போடுறாங்க. இவங்க போட்ட ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் இன்னும் சில நாளில் உடைச்சுட்டு தார் ரோடு போடப் போறாங்க. கேட்டா மரம் நிக்கிது தார் ரோடு உடைஞ்சிடும்ன்னு சொல்றாங்க. ஆனா ஆர்.ஆர். ரோட்டுக்காரங்க எங்களுக்கு ஒதுக்குன அளவு ரோடு போடுவோம்னு சொல்றாங்க. இதனால ஒரு ரோடு போட்டு பில் எடுத்ததும் ஒரு வாரத்தில் உடைக்கப் போறாங்க. மக்கள் வரிப்பணத்தை இந்த அதிகாரிகள் எப்படி வீணடிக்கிறாங்கன்னு பாருங்க. சிமென்ட் ரோட்டை வேறு ஒரு தெருவில் கூட போடலாம் என்கின்றனர்.

இதே போல தான் கறம்பக்குடி ஒன்றியத்தில் கருக்காகுறிச்சி தெற்கு தெருவில் ஒரு தனி நபரின் பட்டா இடத்தில் சுமார் 50 மீ பேவர் பிளாக் ரோடு போட வந்த போது நிலஉரிமையாளர் தடுத்து யாருக்குமே பயன்படாமல் என் நிலத்தில் போட வேண்டாம் என்று சொன்ன போது இன்று ரோடு போடுறோம் ஒரு வாரத்தில் பில் எடுத்ததும் நீங்க ரோட்டை உடைச்சுட்டு விவசாயம் பண்ணுங்கனு சொல்லி இருக்கிறார்கள். அதாவது அரசு பணத்தை பில் போட்டு எடுக்கத்தான் டெண்டர்கள் கொடுக்கிறார்களா அதிகாரிகள்? என்ற கேள்வி சில சம்பவங்களில் இருந்து எழுந்துள்ளது.