Skip to main content

அனைத்து மாவட்டங்களிலும் பாரம்பரிய இசைப்பயிற்சி பள்ளிகள்!- பொதுநல வழக்கு தள்ளுபடி! 

Published on 06/11/2019 | Edited on 06/11/2019

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் பெரியநம்பி நரசிம்ம கோபாலன். உயர்நீதிமன்ற  மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினை இவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,‘தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் 44,000 கோவில்கள் உள்ளன. கோவில் பணம் வங்கிகளில் வைப்பு தொகையாக உள்ளது. கோவில்களில் இன்றளவும் பாரம்பரிய இசைக்கருவிகளை இறை வழிபாட்டிற்கு பயன்படுத்தி வருகின்றனர். கோவிலில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பாரம்பரிய வாத்தியங்களே பயன்படுத்தப்படுகின்றன. தற்போது, அந்தப் பாரம்பரியம் குறைந்து வருகிறது. இசைக் கருவிகளை இசைப்பதற்கு முறைப்படி பயிற்சி பெற்றவர்கள் குறைந்து வருகின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தவில், நாதஸ்வரம், இசைப் பயிற்சி,  ஓதுவார் பயிற்சி, நாலாயிர திவ்விய பிரபந்தம் ஓதும் அர்ச்சகர் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகளை வழங்குவதற்கு மாவட்டம்தோறும் பயிற்சி பள்ளிகள் அமைத்திட தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நேற்று (05/11/2019) விசாரணைக்கு வந்தது. 
 

 Traditional music schools in all districts - welfare case dismissed!



 

அப்போது அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘தமிழக அரசு கொள்கை ரீதியான முடிவெடுத்து, பல இடங்களில் இது போன்ற பயிற்சிப்பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன’என்று தெரிவித்தார்.  இதையடுத்து  நீதிபதிகள், ‘தமிழகத்தில் சில ஆண்டுகளுக்கு முன் புற்றீசல் போல் பெருகிய அரசு மற்றும் தனியார் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் தற்போது காணாமல் போய் விட்டன. அதுபோல், 2019-2020 கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழக கவுன்சிலிங்கில் லட்சக்கணக்கான இடங்கள் காலியாக இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், மனுதாரரின் கோரிக்கை குறித்து எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது..’எனக்கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதே நேரத்தில்,‘ஏற்கனவே விடுமுறை கால வகுப்புகள் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. ஆகவே, மனுதாரரின் கோரிக்கையை உள்ளடக்கிய புதிய மனுவை, தொடர்புடைய அதிகாரிகளுக்கு வழங்கி உரிய நிவாரணம் பெறலாம்..’என்றும் தெரிவித்தனர். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ரசிகர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் - அரசு ஆணையிட பொதுநல மனு தாக்கல்

Published on 14/10/2023 | Edited on 14/10/2023

 

Public Interest Petition filed to order Govt regards fans show

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு திருவிழா போல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறப்பு காட்சிகளில் ரசிகர்கள் வெடி வெடித்து, பேனர் மற்றும் போஸ்டர்கள் அடித்து, கேக் வெட்டி, மேளதாளத்துடன் படத்தை கொண்டாட்டத்துடன் வரவேற்கின்றனர். அந்த வகையில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியான விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு படத்திற்கு, முதல் நாள், நள்ளிரவு மற்றும் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது. அப்போது லாரியின் மீது கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர் ஒருவர் கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். 

 

அதன் பிறகு வெளியான எந்த படத்திற்கும் அதிகாலை மற்றும் சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் விஜய் நடிப்பில் வருகிற 19ஆம் தேதி வெளியாகவுள்ள லியோ படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. முதல் காட்சி காலை 9 மணி முதல் தொடங்கி நள்ளிரவு 1.30 மணிக்குள் கடைசி காட்சி முடிக்கவேண்டும் என கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும் படம் பார்க்க வரும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில் பிரபல நடிகர்களின் ரசிகர் காட்சிகளுக்கு அரசு விதிகள் வகுக்க உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், புதிய பட ட்ரைலர் வெளியிடும் திரையரங்கில் ரசிகர்கள் பொதுமக்கள் பாதுகாப்புக்கு விதிகள் வகுக்க வேண்டும். ரசிகர் காட்சிகளில் வன்முறையில் ஈடுபடும் இளைஞர்களால் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. மேலும் ரசிகர்களை கட்டுப்படுத்தி பொதுமக்களுக்கு பாதுகாப்பு தர உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது

 

 

 

Next Story

'பொதுத் தேவைக்கு போராட குடிமகனுக்கு உரிமை உண்டு'- உயர்நீதிமன்றம் கருத்து!

Published on 10/07/2021 | Edited on 10/07/2021

 

 

chennai high court madurai bench judge

 

சாலையைச் சீரமைப்பதற்காகப் போராடியவர்கள் மீதான இறுதி அறிக்கையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே சாலையைச் சீரமைக்கோரிப் போராடியவர்கள் மீதான வழக்கை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு இன்று (10/07/2021) நீதிபதி இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது.

 

அப்போது மனுவை விசாரித்த நீதிபதி, "தங்களின் பொதுத் தேவைக்கு போராட ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு. தங்கள் கிராமத்திற்கான பொதுச் சாலையைச் சீரமைக்க, செப்பனிடக் கோரியே போராட்டம் நடைபெற்றுள்ளது. கட்டுப்படுத்தக் கூடிய வகையில் நடந்த போராட்டம் என்பதால் இதை சட்டவிரோதம் எனக் கூற முடியாது. அத்தியாவசியத் தேவைகளுக்காக அமைதியாக நடக்கும் போராட்டத்தைச் சட்டவிரோதமாகக் கருத முடியாது" எனக் கூறி சாலையைச் சீரமைப்பதற்காகப் போராடியவர்கள் மீதான இறுதி அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டார்.