Skip to main content

விருத்தாசலத்தில் பாரம்பரிய ரகங்கள் மற்றும் உணவு திருவிழா

Published on 16/10/2022 | Edited on 16/10/2022

 

உலக உணவு தினத்தை முன்னிட்டு, வேளாண்மை உழவர் நல துறையின்  'அட்மா' திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை சார்பில் பாரம்பரிய ரகங்களின் வேளாண் திருவிழா நடைபெற்றது.

 

இவ்விழாவில் வேளாண்மை இணை இயக்குநர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். வேளாண்மை துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் வரவேற்றார். வேளாண்மை துணை இயக்குனர்கள் பிரேம் சாந்தி, பூங்கோதை, விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் பிரேமலதா, மாவட்ட விற்பனை குழு செயலாளர் விஜயா, வேளாண்மை உதவி இயக்குனர் ஜானகிராமன், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன், கடலூர் கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் சிலம்பரசன், அட்மா திட்ட மேலாளர் உமா மகேஸ்வரி, வேளாண் அறிவியல் நிலைய நுண்ணுயிரியல் உதவி பேராசிரியர் காயத்ரி உள்ளிட்ட வேளாண் அதிகாரிகள் கலந்து கொண்டு கடலூர் மாவட்டத்தில் செயல்படும் இயற்கை விவசாய குழுக்கள், பாரம்பரிய ரகங்கள், அரசின் புதிய திட்டங்கள், மண் வளம், மண் பரிசோதனை, பாரம்பரிய ரகங்கள் மதிப்பு கூட்டுதல், பாரம்பரிய தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி, விதை உற்பத்தி, விற்பனை வாய்ப்புகள், நுண்ணீர் பாசனத்தின் முக்கியத்துவம், பயிர் காப்பீடு செய்யும் வழிமுறைகள், இயற்கை இடுபொருட்கள் பயன்படுத்தும் முறைகள், கால்நடையில் பாரம்பரிய ரகங்கள் மற்றும் விற்பனை வாய்ப்புகள், வேளாண்மையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் பங்கு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள். 

 

அதனைத் தொடர்ந்து இயற்கை விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பாரம்பரிய ரகங்கள், சாகுபடி, விவசாயிகளின் தேவைகள், விற்பனை வாய்ப்புகள் குறித்து கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர். விழாவில் வைக்கப்பட்டிருந்த  கண்காட்சியில் கருப்பு கவுனி, சீரக சம்பா, கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, அடுக்கு நெல், யானை கொம்பன், மடுமுழுங்கி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களும், மூலிகை பொருட்கள், நாட்டு வகை காய்கறிகள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

 

கருத்தரங்கில் ஆர்வமுடன் பங்கேற்ற விவசாயிகள் பாரம்பரிய முறையில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை கண்டுகளித்ததுடன் பாரம்பரிய விதைகளை வாங்கியும், பாரம்பரிய முறையில் விளைவிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை உண்டும் மகிழ்ந்தனர். இதுபோன்ற பாரம்பரியம் சார்ந்த வேளாண் நிகழ்ச்சிகளை ஒவ்வொரு பகுதியிலும் நடத்தி,  தமிழக அரசு இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்த வேண்டும் என்றும், விவசாயிகள் பயன்பெறும் வகையில் வேளாண் இயந்திரங்களை, அந்தந்த பகுதிக்குட்பட்ட வட்டாரத்துறை அதிகாரிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

 

வேளாண்துறை அதிகாரிகள் பாரம்பரிய வேளாண் கண்காட்சியை பார்வையிட்டு அதில் சிறப்பாக கண்காட்சி அமைத்திருந்த விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், திருமுட்டம், நெய்வேலி பகுதிகளில் இருந்து அட்மா திட்டத் தலைவர்கள்,  ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

 

முடிவில் வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார் நன்றி கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை சம்பவம்; காவல்துறை விளக்கம்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 Police description on Srimushnam Woman Incident

கடந்த 19ஆம் தேதி முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே உள்ள ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் வாக்களிக்க சென்ற போது பெண் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், பெண் கொலை வழக்கு தொடர்பாக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. 

இது குறித்து காவல்துறை வெளியிட்டுள்ளதாவது, ‘கடந்த 19.042024 தேர்தல் நாளன்று மாலை 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் (47) என்பவரின் தம்பி ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியா ஆகியோர் ஓட்டு போட்டு விட்டு பக்கிரிமானியம் வாட்டர் டேங்க் அருகே வந்துகொண்டிருந்த போது, அதே ஊரைச் சேர்ந்த கலைமணி, ரவி, பாண்டியன், அறிவுமணி ஆகியோர் ஜெய்சங்கர் மற்றும் அவரது மகள் ஜெயப்பிரியாவை ஆபாச வார்த்தைகளால் கேலி கிண்டல் செய்துள்ளனர்.

மேற்படி இரு தரப்பிரனருக்கும் இடையே 2021 ஆம் ஆண்டில் பக்கிரமானியம் கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டு கலைமணி. ஜெயகுமாரை தாக்கியது தொடர்பாக ஸ்ரீமுஷ்னம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கலைமணி கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சூழலில் அன்றைய தினம் ஜெயபிரியாவை கேலி செய்ததை தொடர்ந்து ஜெயசங்கர், அவரது மூத்த சகோதரர் ஜெயக்குமார், ஜெயக்குமாரின் மனைவி கோமதி மற்றும் அவர்களது மகன்கள் சதீஷ்குமார், ஜெயபிரகாஷ் ஆகியோர் ஒருபுறமும் கலைமணி, அவரது மனைவி தீபா மற்றும் அவரது உறவினர்கள் ரவி, பாண்டியன், அறிவுமணி, அருள்செழியன், தர்மராஜ், மேகநாதன், ராஜா, விக்னேஷ் ஆகியோர் கலைமணி மீது ஏற்கெனவே போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறுவதான கலைமணியின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்க மறுத்ததற்காக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு ஒருவரையொருவர் தக்கிக்கொண்டுள்ளனர்.

இந்த விவகாரத்தில் கோமதி தலையிட்டு பிரச்னையைத் தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டுள்ளது. கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் அரசு மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் ஜெயக்குமார் அவரது மகன்கள் ஜெயபிரகாஷ் மற்றும் சதீஷ் குமார் காயம் அடைந்தது காரணமாக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பாக ஜெயக்குமார் என்பவரிடம் வாக்குமூலம் பதிவு செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

மேற்படி வழக்கின் புலன் விசாரணையிலிருந்து இச்சம்பவத்திற்கு ஜெயசங்கரின் மகளைக் கேலி கிண்டல் செய்ததும் கலைமணிக்கும், ஜெயக்குமார் மற்றும் ஜெயசங்கருக்கும் இருந்த முன்விரோதமே காரணம் என்பது இதுவரையில் விசாரித்த சாட்சிகளின் வாக்குமூலங்களில் இருந்தும் முதல் தகவல் அறிக்கை புகாரின் மூலமும் தெள்ளத்தெளிவாக தெரியவருகிறது. இது தவிர வேறு எந்தக் காரணமும் இதுவரை மேற்கொண்ட விசாரணையில் புலப்படவில்லை. மேலும் இவ்வழக்கில் இதுவரையில் ஐந்து எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.