"முலாயம் சிங் யாதவ் இறுதிச் சடங்கில் டி.ஆர்.பாலு பங்கேற்பார்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

T.R. Balu will participate in Mulayam Singh Yadav's funeral

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (வயது 82) உடல் நலக்குறைவால் ஹரியானா மாநிலம், குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில், கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (10/10/2022) காலை 08.16க்கு காலமானார்.

உத்தரபிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. ஓபிசி இட ஒதுக்கீட்டிற்காகப் பாடுபட்ட முலாயம் சிங் யாதவ், மதச்சார்பற்ற கொள்கைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். இந்திய அரசியலில் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் முலாயம் சிங் யாதவ்" என்று புகழாரம் சூட்டினார்.

மேலும், முலாயம் சிங் யாதவின் இறுதிச் சடங்கில் தி.மு.க. சார்பில் கட்சியின் மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முலாயம் சிங் யாதவ் மறைவையொட்டி, உத்தரபிரதேசத்தில் மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும். முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறும் என்று உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

Announcement Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe