Skip to main content

உயிருக்கு உலை வைக்கும் நச்சுப் புகை! - அச்சத்தில் வடசென்னை மக்கள்!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

 

அச்சத்தின் பிடியில், வடசென்னை பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சர்மாநகர் சுற்றுவட்டார மக்கள் உள்ளனர். அச்சத்திற்கு காரணம் என்ன?
 

வியாசர்பாடி தொழிற்பேட்டையில் ஏராளமான சிறு தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த தொழிற்பேட்டைக்கு அருகே வாழும் குடியிருப்புவாசிகளுக்கு திடீர் திடீரென மூச்சுத்திணறல், குமட்டல், கண் எரிச்சல், சரும நோய், ரத்தசோகை, வயிற்றுப் பிடிப்பு, உடல் சோர்வு போன்றவைகள் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். இந்த திடீர் பாதிப்பு ஏன் ஏற்படுகிறது என்று நீண்டநாட்களாக மக்களுக்குத் தெரியவில்லை. அச்சமும், பயமும் அவர்களைக் கவ்விக் கொண்டது.
 

வியாசர்பாடி தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது டி.எம்.ராதா கிருஷ்ணா கம்பெனி. துத்தநாகம் மூலம் இரும்புக் கம்பி மற்றும் குழாய்களுக்கு முலாம் பூசும் இந்த நிறுவனத்திலிருந்து வெளியேறும் நச்சுப்புகைதான் இத்தகைய திடீர் பாதிப்புகளுக்குக் காரணம் என்பதை மக்கள் அறிந்துகொண்டதும், அவர்களின் அச்சம் ஆவேசமாகிறது.
 

இந்த கம்பெனியில் ஆர்டர்கள் அதிகம் வரும்போது வேலைகளும் அதிகமாக நடக்கிறது. இதனால் நச்சுப்புகையின் அளவும் கூடுகிறது. அப்போதுதான் நச்சுப் புகையின் அளவு அதி வேகமாகப் பரவுகிறது. ஆலையின் புகைப்போக்கிகள் மிகக் குறைந்த உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளதும் புகை பரவுவதற்குக் காரணமாகிறது என்கின்றனர் பகுதி மக்கள்.
 

மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு எப்படி அனுமதி அளித்தது எனத் தெரியவில்லை. இந்த ஆலையால் மிகப்பெரிய சேதாரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இப்பகுதி மக்களும், வியாபாரிகளும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

மேலும், நூற்றுக்கணக்கான குடியிருப்பு வாசிகள் கையெழுத்திட்ட புகாரை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கும், சம்மந்தப்பட்ட துறைக்கும் அனுப்பியுள்ளனர். ஆனால், பொதுமக்களிடமிருந்து எந்தப் புகாரும் வரவில்லை என மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
 

Toxic smoke in North Chennai people of perambur scared
                                                          வசந்தகுமார்


இதுகுறித்து நேரடியாக விசாரித்தபோது மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள எருக்கஞ்சேரியில் இந்தப் பிரச்சனை இருந்ததை உணரமுடிந்தது. அங்குள்ள சிறிய மற்றும் பெரிய கடை வியாபாரிகள், உணவுக்கடைகள், பெட்ரோல் பங் ஊழியர்கள் ஆகியோரை விசாரித்தபோது துத்தநாகம் கலந்த புகையால்தான் இந்த விளைவுகள் ஏற்படுவதாக ஒப்புதல் அளித்தனர். 
 

இந்தப் புகையின் வீரியம் பெரும்பாலும் காற்றில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் போதுதான் தெரியும் எனவும், அந்த நேரங்களில் தங்களால் ஓரிடத்தில் நின்று பணிசெய்யமுடியாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். இந்த துத்தநாக ஆலையை மூடவேண்டும் என அப்பகுதி மக்கள் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகார் அளித்ததாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். 
 

இந்தத் தொழிற்சாலையை எதிர்த்துக் குரல் கொடுத்துவரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் எம்.ஏ. சேவியர், அதே பகுதியைச் சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் தனக்கு லஞ்சம் கொடுக்க முயல்வதாக ஆடியோ ஆதாரங்களுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், "இந்த கம்பெனியில் பணியாற்றும் தொழிலாளர்கள் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமலும், உயிர்காக்கும் உபகரணங்கள் இல்லாமலும் தான் பணியாற்றுகிறார்கள். கர்ப்பிணிப் பெண்களையும், முதியவர்களையும் பாதிப்புக்குள்ளாக்கும் இந்த கம்பெனி அருகில் பள்ளிகள், கல்லூரிகள், வழிபாட்டுத்தலங்கள், மார்கெட், பஸ் ஸ்டாண்ட் என மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்கள் உள்ளன. 
 

cnc


சர்மாநகர், புதுநகர், சாலைமாநகர், காந்திநகர், பாரதிநகர், சாஸ்திரிநகர், சிவகாமி அம்மையார் நகர், இந்திரா நகர் உள்ளிட்ட 2 கிலோமீட்டர் சுற்றளவில், காற்றில் கலந்த இந்த நச்சுப்புகை பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதை நாங்கள் தொடர்ந்து எதிர்த்துக் குரல் கொடுத்துவருகிறோம். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டத் துணைச் செயலர் வசந்தகுமார், கடந்த 8ம் தேதி மொபைல் ஃபோனில் மிரட்டல் விடுத்ததோடு, கம்பெனி உரிமையாளர் ஓட்டலில் சந்தித்து லஞ்சம் தர அழைத்ததாகவும் தெரிவித்தார். இது மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளது. எனவே அச்சமூட்டும் வகையில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டத் துணைச் செயலர் வசந்தகுமார், லஞ்சம் கொடுக்க, சேவியரை அழைத்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வடசென்னையில் இளைஞர்களுக்கு இயல்பாகவே கால்பந்து மீது ஆர்வம் அதிகம்” - ஃப்ரீஸ்டைல் கால்பந்து வீரர் மஸ்தான்

Published on 06/04/2023 | Edited on 06/04/2023

 

Masthan Freestyle Footballer  Interview

 

கால்பந்து மீது காதல் கொண்டு அதில் தொடர்ந்து இயங்கி வரும் ஃப்ரீஸ்டைல் கால்பந்து வீரர் மஸ்தானுடன் ஒரு நேர்காணல்...

 

சாதாரண கால்பந்து வீரர்களை விட ப்ரீஸ்டைல் கால்பந்து வீரர்களிடம் பால் கண்ட்ரோல் அதிகமாக இருக்கும். டெக்னிக்கலாக அவர்கள் சிறந்து விளங்குவார்கள். இதில் ரொனால்டினோ அனைவருக்கும் ஒரு இன்ஸ்பிரேஷனாக விளங்கும் மிகச்சிறந்த வீரர். எனக்கும் அவர்தான் இன்ஸ்பிரேஷன். பள்ளிக் காலங்களில் இருந்தே கால்பந்து மீது எனக்கு ஆர்வம் இருந்தது. குடும்ப சூழ்நிலையால் ஒரு கட்டத்தில் அதைத் தொடர முடியாத நிலை இருந்தது. எனக்கும் சில காயங்கள் ஏற்பட்டன. அதன்பிறகு ஃப்ரீஸ்டைல் குறித்து யூடியூபில் பார்த்துத் தெரிந்துகொண்டேன். 

 

விளையாட்டு வீரர்கள் மூலம் நேரிலும் நிறைய கற்றுக்கொண்டேன். சிறந்த வீரர்களுடன் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தேன். இப்போது ஒரு கோச்சாக நானும் நிறைய மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறேன். இந்த விளையாட்டில் பால் கண்ட்ரோல் மிக மிக அவசியம். அதற்கான பயிற்சிகளை நாங்கள் வழங்குகிறோம். இதில் சாதிப்பதற்குக் கடுமையான பயிற்சிகள் தேவை. இப்போதிருக்கும் வீரர்களில் நெய்மர் இதில் சிறந்து விளங்குகிறார். அதற்கு முன்பு இருந்த வீரர்களில் ரொனால்டினோ சிறந்த ப்ளேயர். பொதுவாகவே கால்பந்தில் டெக்னிக் மிக முக்கியமானது. அதன்பிறகு தான் மற்றவை அனைத்துமே.

 

சிறந்த டெக்னிக்குகளைக் கையாள்வது எப்படி என்கிற பயிற்சியை நாங்கள் மாணவர்களுக்கு வழங்குகிறோம். என்னுடைய அகாடமியில் இதுவரை 250 குழந்தைகளுக்கும் மேல் பயிற்சி அளித்திருக்கிறோம். எங்களிடம் கற்ற மாணவர்கள் பல்வேறு மாநிலங்களில் சாதனை படைக்கின்றனர். கால்பந்து இந்தியாவில் வளர்ந்து வரும் ஒரு விளையாட்டாக இருக்கிறது. முன்பு கால்பந்துக்கு அவ்வளவு ஆதரவு இல்லாமல் இருந்தது. இப்போது கால்பந்தை ப்ரமோட் செய்ய அரசாங்கங்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இன்னும் ஐந்து வருடங்களில் நம்மால் FIFA விளையாட முடியும் என்று நம்புகிறேன். 

 

தமிழ்நாட்டில் கால்பந்து விளையாடுவதற்குப் போதிய மைதானங்கள் இல்லை. கார்ப்பரேஷன் மைதானங்கள் கூட தற்போது குறைந்துவிட்டன. அவற்றில் பல மைதானங்கள் பார்க்குகளாக மாறிவிட்டன. பல பள்ளிகளிலும் இப்போது மைதானங்கள் இல்லாத நிலை இருக்கிறது. மற்ற விளையாட்டுகள் போல் கால்பந்திலும் அரசியல் இருக்கிறது. இங்கு அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைப்பது கடினம். சின்ன வயதிலிருந்து பயிற்சியை ஆரம்பிப்பது நல்லது என்பது என்னுடைய கருத்து. சென்னையில் ஃபிரீஸ்டைல் கால்பந்து வீரர்கள் இணைந்து கூட்டமைப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளோம்.

 

வடசென்னையில் இளைஞர்களுக்கு இயல்பாகவே கால்பந்து மீது ஆர்வம் இருக்கும். கால்பந்து விளையாடப்படாத வீதிகளையே அங்கு பார்க்க முடியாது. சிறுவயதிலிருந்தே அவர்கள் கால்பந்து விளையாடுபவர்களாக இருப்பார்கள். கால்பந்து கிளப்புகளில் பெரும்பாலும் திறமைக்குத் தான் வாய்ப்பு. அங்கு அரசியல் இருக்காது. மீடியாக்களில் நடிகர் நடிகைகளுக்குக் கிடைக்கும் விளம்பரம் விளையாட்டு வீரர்களுக்குக் கிடைப்பதில்லை. ISL வந்த பிறகு கால்பந்தின் மீதான ஈர்ப்பு இங்கு அதிகரித்துள்ளது. அதற்கு பல செலிப்ரிட்டிகள் ஆதரவு கொடுத்தனர். அது இன்னும் அதிகரிக்க வேண்டும்.

 

ஃப்ரீஸ்டைல் கால்பந்து இன்னும் ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்படவில்லை. அதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். நாங்கள் நடத்தும் ஷோக்களின் மூலம் பலருக்கு இந்த விளையாட்டு குறித்த புரிதலும் ஆர்வமும் ஏற்படுகிறது. விளையாட்டு நம்மைத் தனிப்பட்ட முறையில் நல்வழிப்படுத்துகிறது. இதற்கு திறமை மட்டுமல்லாது உடல் தகுதியும் அவசியம். நம் நாட்டிற்காக சிறந்த கால்பந்து வீரர்களை நான் உருவாக்கித் தர வேண்டும் என்பது என்னுடைய கனவு. விளையாட்டு வீரர்களுக்கான வேலைவாய்ப்பை அரசாங்கம் இன்னும் அதிகரித்தால் மகிழ்ச்சியாக இருக்கும்.

 


 

Next Story

வடசென்னை பட நடிகருடன் இணைந்த லாஸ்லியா

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Losliya Mariyanesan act with Hari Krishnan annapurani movie

 

இயக்குநர் லயோனல் ஜோசுவா இயக்கத்தில் லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'அண்ணபூர்ணி'. ஹரி கிருஷ்ணன் வடசென்னை, மெட்ராஸ், கபாலி, சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். 'அண்ணபூர்ணி'படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் தரணி ரெட்டி, ராஜீவ் காந்தி, வைரபாலன் ஆகியோர் நடிக்கின்றனர். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இப்படத்தை ஹரி பாஸ்கர் மற்றும் நேதாஜி இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

 

த்ரில்லர் ட்ராமா படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படத்தின் பணிகளை முடித்து திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.